சூ. 247 : | அன்னை என்னை என்றலும் உளவே |
| தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் |
| தோன்றா மரபின என்மனார் புலவர் |
(61) |
க - து : | இசைதிரிந்திசைக்கும் ஒருசார் முறைப்பெயர் வருமாறு கூறுகின்றது. |
பொருள் :முறைப்பொருள் பயவாமல் மகடூ, ஆடூ என்னும் கருத்தமைய அன்னை எனக் கூறலும் என்னை [என் + ஐ] எனக் கூறலும் உளவாதல் புலனெறி வழக்குப் பற்றிய முறைமை, அவை சொல்லிலக்கணத்தானும் எழுத்திலக்கணத்தானும் வரையறைப்பட்டுத் தோன்றாத மரபினையுடையவை என்று கூறுவர் புலவர். |
அன்னை என்பது படர்க்கைச் சொல்லாக நிற்றலும் என்னை என்பது தன்மைச் சொல்லாக நிற்றலும் அவை என்னை, நின்னை, தன்னை என்னும் முறைப்பெயர் போல முதனிலையும் இறுதிநிலையுமாகப் பகுத்துணர நில்லாமையும் பற்றிச் சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்றார். |
எ - டு : அன்னாய் இவன்ஓர் இளமா ணாக்கன் (குறு-33) இது தலைவி தோழியை விளித்தது. அன்னாய் வாழி வேண்டன்னை (ஐங்-202) இது தோழி தலைவியை விளித்தது. |
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது (குறு-27) இது தலைவனைத் தலைவி என்னை என்றது. பிறவும் சான்றோர் செய்யுட்களுள் கண்டு கொள்க. |
இனி நச்சினார்க்கினியர் என்னை மார்பிற் புண்ணும் (புறம்-285) எனவும் என்னை முன்நில்லன்மின் (குறள்-781) எனவும் எடுத்துக் காட்டிப் புறப்பொருளிலும் வருதல் கொள்கை என்பார். ஈண்டுக் கூறிய என்னை என்ப. காதலன், தந்தை, தமையன் என்னும் முறைப்பெயர்ப் பொருள் நோக்குடையது. புறப்பாடலில் வரும் என்னை என்பது தலைவன் என்னும் பொருள் உடையது. ஆதலின் அவர் கருத்து ஒவ்வாமையறியலாம். |