சூ. 268 :

அன்ன பிறவும் அவற்றொடு சிவணி

மன்னிய வினைய நிமித்த மென்ப

(19)
 

க - து :
 

மேற்கூறிய     இருபத்து      நான்கனோடு     அன்னபிறவும்
காமவொழுக்கத்து மெய்ப்பாட்டுப் பொருளாக வருமென்றும், இவ்
இருபத்து  நான்கும்  நிலைபேறுடைய  காமஒழுக்கம்  நிகழ்தற்கு
நிமித்தமாம் என்றும் கூறுகின்றது.
 

பொருள் :மேல்  ஆறு   கூறுகளாக   வகுத்தோதப்பெற்ற  இருபத்து
நான்கும் அவை போல்வன  பிறவும்  அவற்றொடு  கூடி  நிலைபேறுடைய
காமவொழுக்கத்தினது நிமித்தமாம் என்று கூறுவர் புலவர்.
 

"எல்லா  உயிர்க்கும்  இன்பமென்பது  தான  மர்ந்து  வரூஉம்  மேவற்
றாகும்". ஆதலின், மன்பதை மறையாது  நிலை  பெறுதற்குக்  காரணமாகிய
காம ஒழுக்கம் "மன்னிய வினை" எனப்பட்டது.
 

மேற்கூறிய இருபத்து நான்கும் அவை  போல்வன  பிறவும்  தனித்தனி
மெய்ப்பாடு போலும் என  மயங்கற்க.  அவையாவும்  காம  ஒழுக்கத்திற்கு
நிமித்தமாகிய   பொருள்களே   என்பது   விளங்க   "வினைய  நிமித்தம்
என்ப" என்றார்.
 

அன்ன  பிறவாக   வருவன  "அகத்திணைக்குரிய  பொருளாக   வரல்
வேண்டுமென்பார்" அவற்றொடு சிவணி என்றார்.
 

அவை வருமாறு :    மறைந்தவற்     காண்டல்,     தற்காட்டுறுதல்,
நிகழ்ந்தவையுரைத்தல், கையுறை மறுத்தல் முதலியவாம்.
 

எ - டு :

செல்லும் மன்னோ மெல்லம் புலம்பன்

செல்வோன் பெயர்புறத் திரங்கி முன்னின்று

தகைஇய சென்றவென் நிறையில் நெஞ்சம்

எய்தின்று கொல்லோ .....

(அகம்-330)
 

என்பது மறைந்தவற் காண்டல். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.
 

இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்

துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே

நன்றுமன் வாழி தோழி .....

(குறு-98)
 

என்பது தற்காட்டுதல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

துறைவன் துறந்தெனத் துறையிருந் தழுதவென்

மம்மர் வாண்முகம் நோக்கி, அன்னைநின்

அவலம் உரையென் றனளே, கடலென்

பைஞ்சாய்ப் பாவை கொண்டு

வண்டலஞ் சிறுமனை சிதைத்த தென்றேனே
 

(நச்-மேற்கோள்)   இது   நிகழ்ந்தவையுரைத்தல்.   இஃது   அச்சத்திற்கும்
இளிவரலுக்கும் பொருளாக அமையும்.
 

நெய்யொடு மயங்கிய உழுந்து நூற்றன்ன

வயலையஞ் சிலம்பின் தலையது

செயலையம் பகைத்தழை வாடு மன்னாய்

(ஐங்-211)
 

இதன்கண் தழை வாடும் என்றமையான்  கையுறை  மறுத்தமை  புலப்படும்.
இஃது அச்சத்திற்கும் அழுகைக்கும் பொருளாக அமையும்.
 

பிறவும்  இங்ஙனம் மெய்ப்பாடு  தோன்றுதற்கு  ஏற்புடைய  பொருளாக
வருவனவற்றையெல்லாம் ஓர்ந்து இதன்கண் அடக்குக.