சூ. 270 :அவையும் உளவே அவையலங் கடையே
(21)
 

க - து : 
 

மேற்கூறிய புகுமுகம் புரிதல் முதலிய  இருபத்துநான்கும் அவை
போல்வன   பிறவும்   எண்வகை   மெய்ப்பாட்டிற்கும்  உரிய
பொருள்களாம்   என்கின்றது.    [இச்சூத்திரம்   ‘வினையுயிர்’
என்பதற்கு முன் இருத்தல் வேண்டும்.]
 

அஃதாவது ‘உடைமை  இன்புறல்’  முதலிய  முப்பத்திரண்டும் ‘எள்ளல்
இளமை’ முதலாயவை இல்லாதவிடத்து மெய்ப்பாட்டுப்  பொருளாக  வரும்
என்பதனை  அச்சூத்திரத்து  இறுதிக்கண் "அவையு  முளவே  அவையலங்
கடையே"  என   மாட்டேற்றிக்  கூறினார்.  பின்னர்ப்  புகுமுகம்  புரிதல்
முதலியவற்றை வகுத்துக்  கூறி  அவை  "மன்னிய  வினைய  நிமித்தமாம்"

என்றும்  "வினை   உயிர்மெலிவிடத்து  இன்மையும்    உரித்தே" என்றும்
கூறியதல்லது    அவற்றிற்குரிய     மெய்ப்பாட்டுத்      தொடர்பினைப்.
புலப்படுத்தவில்லை   ஆதலின்,   அகத்திணைப்பற்றி  அங்ஙனம் பண்பும்
செயலுமாக   வருமஅவையெல்லாம்    எண்வகை     மெய்ப்பாடுகட்கும்
பொருளாக அமையும் என இச் சூத்திரத்தால் மாட்டேற்றிக் கூறினார் என
அறிக.
 

பொருள் : எள்ளல்   முதல்    விளையாட்டீறாகக்    கூறப்பெற்றவை
தலைவரு பொருளாக அமையாதவிடத்து  அகத்திணைக்கு  உரியவாகவரும்
புகுமுகம் புரிதல் முதலாய  இருபத்துநான்கும்  அன்னபிறவாய  பொருளும்
மெய்ப்பாட்டுப் பொருளாக அமைதற்கு உளவாகும்.
 

இச் சூத்திரத்தின் நிரலையும், பயனையும், சுட்டுச் சொற்களின் மரபையும்
ஓர்ந்து  செம்பொருள்  காணாமல்  உரையாசிரியன்மார்  ‘அவையுமுளவே’
என்பதற்குப்  பின்வரும் இன்பத்தை வெறுத்தல் முதலாயனவும் உளவெனப்
பொருள்   கூறிச்   சென்றனர்.   அங்ஙனம்  கூறின்  அது  வெற்றெனத்
தொடுத்தலாய் முடியும் என்க. மற்றும்  புகுமுகம் புரிதல் முதலாயவற்றையும்
பின்வரும்    இன்பத்தை   வெறுத்தல்   முதலாயவற்றையும்   மெய்ப்பாடு
தோன்றுதற்குரிய   அடிப்படைப்  பொருள்கள்  -   என்னாமல்   அவை
ஒவ்வொன்றும் மெய்ப்பாடு  என்றே  கருதி  விளக்கங்  கூறிச்  சென்றனர்
உரையாசிரியன்மார்.
 

இவை யாவும் மெப்பாடுகளாயின் ‘அவையும்  அன்ன"  அவற்றோரன்ன
-அவற்றொடுங் கொளலே, அவையும் மெய்ப்பாடாகும் என்ப, என்றாற்போல்
சுட்டிக் கூறலாவதல்லது  இங்ஙனம்  "அவையலங்கடை"  என  விலக்குதல்
ஒவ்வாதென்க.