சூ. 109 :

இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்தும்

காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும்

தானகம் புகாஅன் பெயர்த லின்மையின்

காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி

வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்

புகாஅக் காலை புக்கெதிர் பட்டுழிப்

பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்

வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்

தாளாண் எதிரும் பிரிவி னானும்

நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும்

வரைதல் வேண்டித் தோழி செப்பிய

புரைதீர் கிளவி புல்லிய எதிரும்

வரைவுடம் படுதலும் ஆங்கதன் புறத்துப்

புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக்

கிழவோள் மேன என்மனார் புலவர்

(17)
 

க - து :

மேல் 11, 12   ஆகிய   சூத்திரங்களான்   அதிகரித்து   நின்ற
பாங்கியிற்   கூட்டத்தின்கண் தலைமகள் கூற்று நிகழ்த்துமிடமும்
அவள் நிகழ்த்துமாறும் பற்றிய கிளவிகள் இவை என்கின்றது.
 

மற்றுக்  களவின்கண்   தலைவிமாட்டு   முறையாக நிகழும் கூற்றுக்கள்
பின்வரும் "மறைந்தவற் காண்டல்" என்னும் சூத்திரத்தாற் கூறுப.
 

பொருள்:1) இருவகைக்குறி    பிழைப்பாகிய    விடத்தும்  என்பது;
பகற்குறியும்   இரவுக்குறியும்   தலைவனை   எய்துதற்காகாமல் பிழையுற்ற
காலையும்  என்றவாறு.   குறி    பிழைத்தலாவது,   அல்ல  குறிப்படுதல்.
அஃதாவது   குறியிடத்துத்    தன்   வருகையைத் தலைவன் தலைவிக்குத்
தெரிவித்தற்கு   நிகழ்த்தும்   செயற் குறிப்புக்கள்  பிறவகையான் முன்னர்
நிகழ்ந்து விடுதலும், தலைவன் வருதற்கு   இயலாமல்   இடையூறுபடுதலும்
பிறவுமாம்.
 

செயற்குறிப்புக்களாவன :        புள்ளெழுப்புதலும்,     நீர்நிலைகளிற்
கல்லெறிந்து   ஒலியெழுப்புதலும்   சீழ்க்கை  ஒலி எழுப்புதலும் பிறவுமாம்.
இவை   பிறவாற்றான்  நிகழ்ந்த  வழி ஆண்டுத் தலைவி  வந்து பார்த்துத்
தலைவனைக் காணாது வருந்தி மீளுதல். தலைவன்  செய்யாத  குறியினைத்
தலைவன் செய்ததாக எண்ணியது குறிபிழைத்தலாயிற்று.
 

எ - டு :

இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக்

கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல்

எம்மினும் உயவுதி செந்தலை அன்றில்

கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ

நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே

(நச்-மேற்)
 

எனவரும்.
 

2) காணா   வகையிற்   பொழுதுநனி  இகப்பினும்  என்பது; தலைவன்
குறியிடத்திற்கு வர இடையூறு நேர்ந்த வழி  இற்றை  ஞான்று தலைவனைக்
காணல்   அரிதென   வருந்தும்  மிக்க   பொழுது  நீண்டு கழியுமிடத்தும்
என்றவாறு.
 

தலைவன் வருதற்கிடையூறாவன : நாய்குரைத்தலும்,  ஊர்துஞ்சாமையும்,
காவலர்கடுகலும்,   நிலவு  வெளிப்படலும்,  கூகை  குழறலும்,  கோழிகுரல்
காட்டலும் பிறவுமாம்.
 

எ - டு :

இரும்பிழி மகாஅர்இவ் அழுங்கல் மூதூர்

விழவின் றாயினும் துஞ்சா தாகும்

மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்

வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்

பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்

துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்

இலங்குவே லிளையர் துஞ்சின் வைஎயிற்று

வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்

அரவவாய் ஞமலி குரையாது மடியின்

பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின்

அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே

திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்

இல்லெலி வல்வசி வளைவாய்க் கூகை

கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்

வளைக்கண் சேவல் வாளாது மடியின்

மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்

எல்லாம் மடிந்த காலை ஒருநாள்

நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே, அதனான்

அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து

ஆதி போகிய பாய்பரி நன்மா

நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்

கன்முதிர் புறங்காட் டன்ன

பல்முட்டின்றால் தோழி நங்களவே

(அகம்-122)
 

எனவரும்.
 

3) தானகம்   புகாஅன்   பெயர்த   லின்மையின்   காட்சி ஆசையிற்
களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் என்பது :
அல்ல குறிப்பட்டு மீண்ட தலைவி    தலைவன்  பெருவேட்கையனாதலின்
குறியிடத்திற்கு வந்தன்றி மீளான் என  எண்ணி,  அவன் வந்து இழைத்துச்
சென்ற அடையாளங்களையேனும் காணற்கு  அவாவிக்    குறியிடத்திற்குச்
சென்று அவற்றைக் கண்டு வேட்கையான்  மயங்கிச்  செயலறு பொழுதினும்
என்றவாறு.
 

தலைவன்  இழைத்துச்  செல்லும் அடையாளங்களாவன; தான் புனைந்த
கண்ணி,  மாலை முதலியவற்றை  ஆண்டொரு  கொம்பிற்கு  அணிவித்துச்
செல்லுதலும் விரற்செறியினைப் பூட்டிச்செல்லுதலும் பிறவுமாம்.
 

எ - டு :

இக்காந்தள் மென்முகைமேல் வண்டன்றஃதிம் முகையின்

கைக்காந்தள் மெல்விரலாய் காணிதோ - புக்குச்

செறிந்ததுபோற் றோன்றும் தொடுபொறி யாம்பண்

டறிந்ததொன் றன்ன துடைத்து

(நச் - மேற்)
 

எனவரும்.
 

4) புகாஅக்   காலை  புக்கெதிர்ப்  பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்
கண்ணும்   என்பது  : மனையகத்தார்   உணவு  கொள்ளும்  வேளையில்
தலைவன்  விருந்தினனாய்    எதிர்ப்பட்டவழித்    தவிர்க்க   இயலாமல்
இல்லத்தார் அவனை விருந்தாக ஏற்ற பகுதிக் கண்ணும்   என்றவாறு.  பிற
பொழுதாயின் ஓம்புதல் ஒருதலையின்மையின் புகாஅக் காலை என்றார்.
 

எ - டு :

அன்னை வாழ்க பலவே தெண்ணீர்

இருங்கடல் வேட்டம் எந்தை புக்கெனத்

தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோர்

எல்லமை விருந்தினென் என்ற

மெல்லம் புலம்பனைத் தங்கென் றோளே

(நச்-மேற்)
 
எனவரும்.
 

5) வேளாண்  எதிரும்   விருப்பின்  கண்ணும் என்பது : தலைவி தான்
இரவுக்குறி நேர்வாளாய்ச், செல்லும் வழியிடை உறும்  ஏதங்களைக்  கூறித்
தங்கிச் சேறல் நலமாம் எனத் தலைவனை விருந்தாக ஏற்கும் விருப்பினைக்
குறிப்பினாற் புலப்படுத்துமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்

நுணங்குமண லாங்கண் உணங்கப் பெய்ம்மார்

பறிகொள் கொள்ளையர் மறுக உக்க

மீனார் குருகின் கானலம் பெருந்துறை

எல்லை தண்பொழில் சென்றென செலீஇயர்

தேர்பூட் டயர ஏஎய் வார்கோல்

செறிதொடி திருத்தி பாறுமயிர் நீவி

செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச்

சொல்லிய அளவைத் தான்பெரிது கலுழ்ந்து

தீங்கா யினள்இவ ளாயின் தாங்காது

நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப்

பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனால்

சேணின் வருநர் போலப் பேணா

இருங்கலி யாணர் எம்சிறுகுடித் தோன்றின்

வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத்

துறையும் மான்றன்று பொழுதே சுறவும்

ஓதம் மல்கலின் மாறா யினவே

எல்லின்று தோன்றல் செல்லா தீமென

எமர்குறை கூறத் தங்கி ஏமுற

இளையரும் புரவியும் இன்புற நீயும்

இல்லுறை நல்விருந் தயர்தல்

ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே

(அகம்-300)
 

எனவரும்.
 

விருந்தினானும்   எனப்பாடங்    கொண்டு   அதற்கேற்ப  உரைப்பார்
நச்சினார்க்கினியர்.
 

6) தாளாண்   எதிரும்   பிரிவி னானும் என்பது : தாளாண்மை புரியும்
பொருட்டுத் தலைவற்குப் பிரிவு நேர்ந்தவிடத்தும் என்றவாறு.
 

‘’வெளிப்படைத் தானே கற்பினொ டொப்பினும்

ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக

வரையாது பிரிதல் கிழவோற் கில்லை’’ (சூ-51) என்றதனான்
 

தலைவன்  வரைந்தல்லது  பகைவயிற்   பிரிதல்  மரபன்மையான் இது
பகைவர்   மண்ண சையுற்றும்  மைந்து பொருளாகவும் வலிந்து போரொடு
வந்தவிடத்து அவரை அடர்த்தொடுக்குதலைக் கருதிப் பிரியும்   பிரிவெனக்
கொள்க. இப்பிரிவு அந்தணர் ஒழிந்த மூவர்க்கும் ஏற்கும்.
 

இப்பிரிவு முடியுடை வேந்தர்  ஏவலிற்  பிரியும்  அரசர்க்குரித்தென்பார்
நச்சினார்க்கினியர்.    அது     தலைவனது   தலைமைக்கிழுக்காமாதலின்
பொருந்தாமையறிக. எ. டு. வந்துழிக் கண்டு கொள்க.
 

7) நாணுநெஞ்  சலைப்ப   விடுத்தற்  கண்ணும்  என்பது : பெண்மைக்
குணமாகிய  நாணுடைமை  தனது   நெஞ்சினை அலைத்தலான் அதனைக்
கைவிடுதலைக் கருதிய விடத்தும் என்றவாறு.
 

அது  தோழியின் மாட்டு அறத்தொடு நிற்றற் கண்ணும்,  உடன்போக்கு
நேரும்   வழியும்   வரைவுகடாதற்   பகுதியிடத்தும்   நாணுத்    துறந்து
உரைத்தலாம்.
 

எ - டு :

அளிதோ தானே நாணே நம்மொடு

நனிநீ டுழந்தன்று மன்னே இனியே

வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை

தீம்புனல் நெறிதர வீந்துக் காங்கு

தாங்கும் அளவைத் தாங்கிக்

காமம் நெரிதரக் கைந்நில் லாவே

(குறு-149)
 

இஃது  உடன்போக்கு   நேர்ந்த  தலைவி  தோழிக்குரைத்தது. பிறவும்
சான்றோர் செய்யுளுட் கண்டு கொள்க.
 

8) வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும்
என்பது :   தலைவன்   வரைந்து   கோடலை   விரும்பி வரைவு கடாதற்
பொருட்டுத்   தோழி  தலைவனை  இயற்பழித்துச்  செப்பிய புல்லியவாகிய
கிளவியை  எதிர்மறுத்து இயற்பட  மொழியுமிடத்தும்  என்றவாறு.  புல்லிய
புரைதீர்கிளவி எனக் கூட்டுக.
 

புரைதீர்கிளவி = தலைவனது   உயர்வினைக்  குறைபடுக்கும் பழிப்புரை.
இதனை   இயற்பழித்தல்  என்ப.  எதிரும்   என்பது  எதிர்த்துக் கூறலும்
என்றவாறு.   அஃதாவது   தோழி   இயற்பழித்ததனை      ஒக்குமெனக்
கொள்ளாமல் மறுத்துரைத்தல். இதனை இயற்பட மொழிதல் என்ப.
 

எ - டு :

குறிஞ்சிக்கலி (42) வள்ளைப்பாட்டினில் தோழி,

நாணிலி எனக்கூறி,

"வரைமிசை மேல் தொடுத்த நெய்க்கண் இறாஅல்

மழைநுழை திங்கள் போல் தோன்றும் இழைநெகிழ

எவ்வம் உறீஇயினான் குன்று
 

என இயற்பழித்தவழித் தலைவி
 

எஞ்சாது, எல்லா, கொடுமை நுவலாதி

அஞ்சுவது அஞ்சா அறனிலி யல்லன்என்

நெஞ்சம் பிணிக்கொண்டவன்"
 

என மறுத்து இயற்பட மொழிந்தவாறு கண்டுகொள்க.
 

அருவி வேட்கைப் பெருமலை நாடற்கு

யான்எவன் செய்கோ என்றி யானது

நகையென உணரே னாயின்

என்னா குவைகொல் நன்னுதல் நீயே

(குறு-96)
 

என்பதுமது.
 

9) வரைவுடம்   படுதலும்   என்பது  :  தலைவற்குத்  தமர்   வரைவு
நேர்ந்தவிடத்தும் என்றவாறு. இது  தன்னானும்  தோழியானும்  அறிந்தவழி
நிகழும்.
 

எ - டு :

ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்

தமியர் உறங்கும் கௌவை யின்றாய்

இனியது கேட்டின் புறுகவிவ் வூரே

முனாஅது யானையங் குருகின் கானலம் பெருந்தோடு

அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்

குட்டுவன் மாந்தை யன்னவெம்

குழைவிளங்கு ஆய்நுதற் கிழவனு மவனே.

(குறு-34)
 

10) ஆங்கதன்   புறத்துப்   புரைபட  வந்த  மறுத்தலொடு தொகைஇக்
கிழவோள்   மேன  என்மனார்  புலவர் = ஆங்குத் தமர் வரைவு நேர்தல்
தலைவற்குப்  புறத்ததாய  வழித்   தனது  கற்பும் இற்பிறப்புமாகிய உயர்வு
விளங்குமாறு  தோன்றி,  வந்த  பிறர் வரைவினை  மறுத்துக்  கூறுதலாகிய
கிளவியொடு  கூடி  நிகழும்  கிளவிகள்  எல்லாம் களவொழுக்கத்தின்கண்
தலைவியிடத்தனவாம் எனக் கூறுவர் புலவர்.
  

‘ஆங்கதன்   புறத்து’   என்றது  நொதுமலர் வரைவு  கருதி வருதலை.
புரை = உயர்வு.  அஃது   ஈண்டுத்   தலைவியின்  கடைப்பிடியைச் சுட்டி
நின்றது.
 

எ - டு :

பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை

சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச்

செருவுறு குதிரையின் பொங்கிச் சாரல்

இருவெதிர் நீடமை தயங்கப் பாயும்

பெருவரை அதடுக்கத்துக் கிழவோன் என்றும்

அன்றை யன்ன நட்பினன்

புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே.

(குறு-385)
 

எனவரும்.