சூ. 133 :

இரவுக் குறியே இல்லகத் துள்ளும்

மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே

மனையகம் புகாஅக் காலை யான

(41)
க - து :

இரவுக்குறி நிகழும் இடமாமாறு கூறுகின்றது.
 

பொருள் : இரவுக்குறி   நிகழும்        களமாவது     இல்லத்தினது
அகப்பாட்டெல்லையுள்ளும், மனையகத்திற் புகுதற்கு ஆகாத போழ்தின்கண்
மனையினுள்ளார் பேசும்   கிளவிகள்    தம்    செவியுறக்      கேட்கும்
புறப்பாட்டெல்லையுள்ளும் ஆகும் என்ப.
 

மனையகம்   புகாக்காலை  என்றதனான் ‘இல்லகம்’ என்றது மனைக்கும்
மனையைச் சூழ்ந்த எயிலுக்கும் (வேலி) இடைப்பட்ட உள்ளிடம்  என்பதும்
‘மனையோர் கிளவி கேட்கும் வழியது’ என்றதனான்   எயிலின் புறத்தாகிய
இடம் என்பதும் புலப்படும்.   அஃதாவது   இரவுக்குறி மனையைச் சூழ்ந்த
எயிலின் அகத்தும் புறத்தும் பொருந்துமாற்றான் நிகழும் என்றவாறு.
 

செவிலி   ஐயுற்றுத்   தேடமுற்பட்டவழி விரைந்து மனைக்கண் சேர்தல்
வேண்டுதலின்   மனையோர்   கிளவி   கேட்கும்  வழியது எனப்பட்டது.
அதனான்   இல்லகம்   என்பது   பார்வைக்கு   உட்பட்ட இடம் என்பது
உய்த்துணரப்படும்.
   

மனையோர்   கிளவி   கேட்கும்   வழியது   என்ற   இடம் மதிலின்
புறத்ததெனக்   கொள்ளாவிடின்   இரவுக்குறிவந்த   தலைவன்    குறியீடு
செய்தற்கும்,   தலைவி   அல்ல   குறிப்பிடுதற்கும்    வாய்ப்பின்மையறிக.
இதனை  ஓராதார் இரவுக்குறி மனையின் அகத்தும் புறத்துமே நிகழும் என
மயங்குவர்.
 

எ - டு :

‘உளைமான் துப்பின்’ என்னும் அகப்பாட்டினுள் 

(102)

"காவ லறிதல் ஓம்பிப் பையென

வீழாக் கதவம் அசையினள் புகுந்து

உயங்குபட ரகலம் முயங்கித் தோள்மணந்து

இன்சொல் அளைஇப் பெயர்ந்தனள் தோழி"
 

எனவரும். இஃது இல்லகத்து நிகழ்ந்த இரவுக்குறி.
 

‘கூறுவங்கொல்லோ’ என்னும் அகப்பாட்டினுள்

(198)

"இளமயில் சூழ்ந்த மடமயில் போல

வண்டுவழிப் படர தண்மலர் வேய்ந்து

வில்வனப் புற்ற நல்வாங்கு குடைச்சூல்

அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து

துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்

ஆன்ற கற்பின் சான்ற பெரியோள்" எனவரும்.
 

இது மதிற்புறத்து நிகழ்ந்த இரவுக் குறி. பிறவும் இவ்வாறே
கண்டுகொள்க.