சூ. 254 :

இளிவே இழவே அசைவே வறுமை என

விளிவில் கொள்கை அழுகை நான்கே

(4)
 

க - து :
 

இளிவு    முதலாய     நான்கு     பொருள்பற்றி    அழுகை
தோன்றுமென்கிறது.
 

பொருள் : இளிவு இல்லாத கோட்பாட்டினையுடைய அழுகையென்னும்
மெய்ப்பாட்டிற்குக்  காரணமாகிய  பொருள்   இழிவும்  இழவும்  அசைவும்
வறுமையும் என நான்குமாம் எனக்கூறுவர் புலவர்.
 

இழிவென்பது    எதுகை   நோக்கி   இளிவென    நின்றது.   அன்றி
இளிவென்பதும்   ஒரு   சொல்விழுக்காடு  எனினும்  அமையும்.  நான்கே
என்னும் ஏகாரம் ஈற்றசை. ஏனைய எண்ணுப் பொருளின.  என்ப  என்பது
அதிகாரத்தான் வந்தது. இவை நான்கும் இருபாலும் பற்றிவரும்.
 

1. இழிவாவது : இகழ்தற்குரிய    பண்பும்   செயலும்   நிலைமையும்
பற்றிவரும் இழிதகவு.
 

எ - டு :"கடல் கண்டன்ன"  என்னும்  அகப்பாடனுள்  நீ  மாணிழை
முன்கைக் குறுந்தொடி துடக்கிய  நெடுந்தொடர்  விடுத்தமையான்  தன்னை
இழிதகவு செய்ததாகக் கருதிய பரத்தை,
 

"தன்முகத்து எழுதெழில் சிதைய அழுதனள்" (அக-176)
 

என்றது தண்கண் அமைந்த இழிவுபற்றிப் பிறந்த அழுகை.
 

"கயமலருண்கண்ணாய்"   என்னும்   கலியுள்   "தானுற்ற   நோயுரைக்
கல்லான் பெயரும்மன் பன்னாளும்" எனத்  தலைவன்  இழிவந்தொழுகுதல்
காரணமாகச் "சேயேன்மன் யானுந்  துயருழத்தேன்" (கலி-37) எனத்  தோழி
கூறியது பிறரிழிவு காரணமாகப் பிறந்த அழுகையாம்.
 

2. இழவாவது :தாய், தந்தை, கணவன் முதலிய சுற்றத்தைப்  பிரிதலும்
பெறற்கரிய பொருளை இழத்தலுமாம்.
 

எ - டு :

"மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே"
(புறம்-249)
 

என்பது தன்கண் தோன்றிய இழவு பற்றிப் பிறந்த அழுகை.
 

"நின்னோய்த் தலையை யுமல்லை தெறுவர

என்னா குவள்கொல் அளியள் தானென

என்னழி பிரங்கும் நின்னொடு யானும்"

(அகம்-73)
 

எனத்  தலைவன்  பிரிவிற்குத்  தோழி  இரங்கினாள்  என்றமையின்  இது
பிறர்கண் அமைந்த இழவுபற்றி வந்த அவலமாம்.
 

3. அசைவாவது : நிலையிற்றிரிதல்.  அஃதாவது   பண்டைய  உயர்வு
முதலிய கெட்டுத் தாழ்வுற்ற நிலைமை, தாழ்வின் நீங்கி உயர்தலும்  திரிபே
எனினும்   ஈண்டு   அழுகைக்குப்   பொருளாகக்   கூறலின்   நிலையின்
இழிதலாகிய திரிபே கொள்ளப்படுமென்க.
 

எ - டு :

வையம், புரவூக்கும் உள்ளத்தேன் என்னை இரவூக்கும்

இன்னா இடும்பை செய்தாள்

(கலி-141)
 

என்பது தன்கண் தோன்றிய அசைவுபற்றிப் பிறந்த அவலமாம்.
 

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

(புறம்-164)
 

என்பது பிறர்கண் உற்ற அசைவுபற்றிப் பிறந்த அவலம்.
 

4. வறுமையாவது : இலம்பாடு. அஃதாவது  தான் நுகர்தற்கு அவாவும்
பொருளைப் பெறுதற்கியலா நிலைமை.
 

எ - டு :

இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை

சுவைத்தொ றழூஉந்தன் மகத்து முகநோக்கி

நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென்

மனையோ ளெவ்வம் நோக்கி நினைஇ

நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண

(புற-164)
 

இதனுள்   "சுவைத்தொ   றழூஉந்தன்   மகவு"   என்றது  தனக்கு  உற்ற
வறுமைபற்றி வந்த அழுகை.
 

"மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ்

மழைக்கண் என்மனையோள்"
 

என்றது பிறர்க்குற்ற வறுமைபற்றிப் பிறந்த அழுகை.
 

"விளிவில் கொள்கை அழுகை" என்றதனான்

இன்ன விறலும் உளகொல் நமக்கென

மூதிற் பெண்டிர் கசிந்தழல் நாணிக்

கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை

(புறம்-19)
 

எனப் பெருமிதத்தான்  வரும்  உவகைக்கலுழ்ச்சி  போல்வனவும்  அழுகை
என்னும்    மெய்ப்பாட்டினுள்   அடக்கிக்    கொள்ளப்பெறும்   என்பார்
பேராசிரியர்; சுவை என்னும்  நோக்கிற்கு  இது  பொருந்தும்.  மெய்ப்பாடு
பெருமிதம் எனலே நேரிது.