சூ. 209 :

உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்

அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப

(13)
 

க - து :

களவொழுக்கமாகிய பொருள் புலப்பாடு அதிகாரப்பட்டமையான்
தலைவியது  களவினை  ஓராற்றான் அறிந்தல்லது இற்செறிப்பும்,
வெறியாட்டெடுத்தலும்        பிறவும்       நிகழ்த்தாராதலின்
தோழியையின்றித் தாயர்  தாமேயும் உணர்வர் என்பதும் அவர்
உணருமாறும் பற்றிக் கூறுகின்றது.
 

பொருள் :வெறியாட்டெடுத்தல்  முதலாக  யாதானும்  ஓர் இடையூறு
நிகழும் வழியல்லது அறத்தொடு நிலை வகையான் தன்னிலையைத் தலைவி
கூறல் மரபன்மையான் களவின்வழி யொழுகும் அவள் விருப்பத்தை அவள்
ஒழுகுமாற்றான் செவிலியும் நற்றாயும் உணர்ந்து கொள்வர்.
 

உணர்த்தாதவிடத்துச்   செவிலியும்    நற்றாயும்   கட்டும்,   கழங்கும்
காணுதல்,   வெறியாட்டெடுத்தல்   முதலியவை   நிகழ்த்துமாறு யாங்ஙனம்
என்னும் ஐயத்தை உட்கொண்டு  தோழி உணர்த்தா வழியும்  தலைவியினது
மேனி வேறுபாட்டானும் பிற நிலைமைகளானும் உணர்ந்து கொள்வர் எனத்
தாயர் தம் ஆய்வறிவையும் பொறுப்புணர்வையும் சுட்டி உணர்த்துகின்றது.
 

எ - டு :

"அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்

பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு

நனிபசந் தனள்என வினவுதி"

(அக-48)
 

என்னும் தோழி கூற்றினுள் நற்றாய்  தலைவியது மேனி வேறுபாடும் பிறவும்
நோக்கி உசாவியமை கண்டு கொள்க.
 

இதற்கு   நச்சினார்க்கினியர்  கூறும்  உரையும்   விளக்கமும்  கூறியது
கூறலாய் இயைபின்றி நிற்குமாற்றை அறிக.