சூ. 214 :

உண்டற் குரிய வல்லாப் பொருளை

உண்டன போலக் கூறலும் மரபே

(18)
 

க - து :  அகத்திணை   மாந்தர்   கூற்றினுள் இசை திரிந்திசைக்கும்
ஒருசார் சொற்பொருண்மை கூறுகின்றது.
 

பொருள் :உண்டல் - தின்றல் முதலிய தொழில்களை நிகழ்த்துதற்குரிய
வல்லாத  பொருள்கள் உண்டல்  முதலாய  தொழில்களைப் புரிவனபோலக்
கூறலும் அகவொழுகலாற்றின்கண் மரபாகும்.
 

எ - டு : 

பசலையால் உணப்பட்டுப் பண்டை நீரொழிந்தக்கால்

(கலி-15)

எனவரும்.
 

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காண லுற்று

(குறள்-1244)
 

என்பதுமது.
 

இனி   உய்த்துக்  கொண்டுணர்தல்   என்னும்  உத்தியான்   உண்டற்
கியலாதவற்றை உண்டதாகக் கூறலும் கொள்க.
 

தோள்நலம் உண்டு துறக்கப்பட்டோர் (கலி-23) எனவரும்.
 

உம்மையான் பிறதொழில்பட வருவனவும் கொள்க.
 

எ - டு :

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு

(குறள்-1187)