சூ. 239 : | உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி |
| ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே |
(43) |
க - து : | தலைவன் தலைவியர் கூற்றுப் பற்றியதோரியல்பு கூறுகின்றது. |
பொருள் :புலனெறி வழக்கின்கண் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கூறும் கிளவி தலைவற்கும் தலைவிக்கும் ஒப்ப உறழ்ந்து வரும். ஐயுற்றுக் கூறும் கிளவி தலைவிக்கு ஆகாது தலைவற்கே உரித்தாக வரும். |
உறழ்தல் = நியதியின்றி மாறி வருதல். தலைவி ஐயுறின் அதனைக் களைதற்குரிய கருவியாகிய உரனுடைமை தலைவிக்கு ஓதப்பெறாமையான், அச்சமே மிகும். அவ் அச்சத்தாற் காமக்குறிப்பு அழியுமாதலின் தலைவி ஐயுறுதல் புலனெறி வழக்கன்று என்க. |
ஐயக்கிளவியை வரையறை செய்வாராய் உயர்மொழிக் கிளவியை உடன் ஓதினார் என்க. பின்னர்த் தோழிக்கும் உயர்மொழிக் கிளவியை எய்துவித்தற் பொருட்டென அறிக. |
நச்சினார்க்கினியர் உறழும் கிளவி என்பதற்கு எதிர்மறுத்துக் கூறும் கிளவி என உரை கூறுவார். அஃது அவரவர்க்கு ஓதப்பட்ட கிளவிகளுள் அடங்குமாதலின் பயனில் கூற்றாய் முடியுமென்க. எ - டு : களவியலுள் கண்டு கொள்க. |