எனவரும். இது பகற்குறிக்கண் தோழி செறிப்பறிவுறீஇத் தலைவற்கு வரைவு கூறியது. இதன்கண் தன் எவ்வங் கூறுதற்காக வரும் தலைவன் என்றதனான் தோழி அவன் மனநிலையை நன்குணர்ந்திருந்தும், அவனது இளி வந்த நிலையை எண்ணாமல் "நின்மலை ஆரம் நீவிய அம்பகட்டு மார்பினை, சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை" எனச் சிறப்பித்தலும், புனத்தை எரியூட்டிப் பண்படுத்தி ஏனல் விளைவு செய்யும் இயல்பானதொரு செயலை, "எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல்" எனச் சிறப்பித்தலும் வலிந்து கூறப்பட்டனவாதல் தெரியலாம். அதனான், அவற்றான் தலைவற்குச் சில உணர்த்துதல் தோழி கருத்தாதலை அறியலாம். அக்கருத்துக்களாவன :- "நின்மலை ஆரம் நீவிய அம்பகட்கு மார்பினை" என்றது : தலைவியை வரைந்தெய்தி அவள் நலத்தினைத் துய்த்தல் நின் தலைமைக்குத் தக்கது என்பதும், "சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை" என்றது : நொதுமலர் வரைவு வேண்டி வருதல் கூடுமாதலின் நீ அவரின் முற்பட்டு நின்தமரை வரைவுவேண்டி உய்த்தல் தகவதாகும் என்பதும். "எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல்" என்றது : தந்தையின் காவல் காரணமாக ஊர் அலர் எழாது தேய்ந்தமையான் இற்செறிப்புற்றுள்ள தலைவி நின் வரைவினை எதிர்நோக்கி ஒடுங்கி இருக்கின்றாள் என்பதும் தோழி உணர்த்தக் கருதிய உள்ளுறைகளாகும். இவ்வுள்ளுறை செய்யுட்களுள் அருகியே வரும். இச்செய்யுளுள் "கொடியோர் குறுகும் ... .... அடுக்கத்து" என்பது உள்ளுறை உவமமாகும். நச்சினார்க்கினியர் உள்ளுறை உவமங்கோடற்கு உரியவாக நிகழும் ஏனை உவமங்களைக் காட்டிச் சிறப்பு என்னும் உள்ளுறை என்பார். அஃதாவது உள்ளுறை உவமத்திற்குச் சிறப்புக் கொடுத்து நிற்றலான் சிறப்பாயிற்று என்பார். அஃது ஆசிரியர்கருத்தாயின் ‘சிறப்பு’ என்பதை உள்ளுறையின் ஒரு வகையாக ஓதுதலும் ‘ஐந்தே’ எனத் தொகை கூறலும் பிழையாதலொடு ஏனையுவமமும் உள்ளுறைப் பொருளைத்தரும் எனப்பட்டு மயக்கஞ் செய்யுமென்க. இவ் ஐவகை உள்ளுறைகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் வருமாறு: ஒற்றுமை :இவை ஐந்தும் அகத்திணை மாந்தர்க்குரிய கூற்றாகச் செய்யுட்கண் அமைந்து வரும். வேற்றுமை :1) உடனுறை : கருப்பொருள்களின் பண்பினையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டு உவமமும் பொருளுமாக இயைத்துக் கூறுதற்கு ஏலாமல் திறத்தியல் மருங்கின் தெரியுமோர்க்கே புலப்பட்டு வரும். 2) உள்ளுறையுவமம் :உவமும் பொருளுமாக ஒப்பிட்டுக் கூறுதற்கு ஏற்புடைத்தாகித் தெய்வ மொழிந்த கருப்பொருள்களின் அடிப்படையில் வினை, பயன், மெய், உரு, பிறப்பு என்னும் வகைப்பாடு தோன்றத் தெற்றெனப் புலப்பட்டு வரும். 3) சுட்டு :இறைச்சிப் பொருள் போலச் சொற்றொடரொடு உடனுறைவு ஆகாமல் வரையறையின்றி யாதானும் ஒரு பொருள் பற்றிக் கூறும் கூற்றினுள் கூறுவோர் தம் கருத்தாகக் கொள்ளுமாறு நுண்ணிதாக அமைந்து வரும். 4) நகை :முதற்பொருள், கருப்பொருள் என்னும் அடிப்படையைக் கருதாமல் எள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு நகையாட்டாக நிகழும் கூற்றினுள் குறிப்பாக அமைந்து வரும். 5) சிறப்பு : கருப்பொருளை அடிப்டையாகக் கருதாமல் ஒருவரைச் செயற்கையாகச் சிறப்பித்துப் பாராட்டிக் கூறும் கூற்றினுள் நுட்பமாக அமைந்து வரும். சுட்டு, நகை, சிறப்பு என்னும் இவ்வுள்ளுறைகளை இலக்கிய உரையாசிரியன்மார் பலரும் செய்யுளுள் அமைந்த நயமாகக் கருதி விளக்கம் கூறிச் சென்றமையான் இவ் இலக்கணக் கூறுகள் புலப்படாமலும் வழக்கிழந்தும் போயின. இக்காலத் திறனாய்வாளர் பலர் இவற்றை நுண் பொருளாக விளக்கிக் கூறுவர். |