சூ. 259 :

உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற

வெறுப்பின் வந்த வெகுளி நான்கே

(10)
 

க - து :
 

உறுப்பறை   முதலிய   நான்கும்  பற்றி   வெகுளி  தோன்று
மென்கிறது.
 

பொருள் :வெறுப்பினான் வந்த வெகுளியென்னும்  மெய்ப்பாட்டிற்குக்
காரணமாகிய பொருள் உறுப்பறை  குடிகோள்  அலை  கொலை  என்னும்
நான்குமெனக் கூறுவர் புலவர்; இவை நான்கும் பிறர்  கட்டோன்றுவனவாய்
நிகழும்.
 

1. உறுப்பறையாவது :உறுப்புக்களைச் சிதைத்தலும் ஊறுபடுத்தலுமாம்.
உறுப்பாவது  கை, கால்,  கண், செவி  முதலிய  உடலுறுப்புக்களும்,  தூது,
ஒற்று, அமைச்சு முதலிய அரச உறுப்புக்களுமாம்.
 

எ - டு :

முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று

.... ..... ...... ....... ....... ....... ................. ....... ......... ........

நிறஞ்சாடி முரண்தீர்த்த நீள்மருப் பெழில்யானை
(கலி-52)
 

எனவரும்.
 

2. குடிகோளாவது :  தன்குடிமைக்கும்     தன்னாற்    புரக்கப்படும்
குடிமக்களுக்கும் தீங்கிழைத்தல். கொளுவுதல் கோள் என நின்றது.
 

எ - டு :

நெருநெல் எல்லைநீ எறிந்தோன் தம்பி

அகற்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்

(புற-300)
 

நின்மகன், படையழிந்து மாறினனென்று பிறர்கூற

மண்டமர்க் குடைந்த னனாயின் உண்டவென்

முலையறுத் திடுவென் யான்எனச்சினைஇ

(புறம்-278)
 

எனவரும்.
 

3. அலையாவது :கோல்    முதலாயின     கொண்டு    ஒறுத்தலும்
அலைக்கணுறச் செய்தலுமாம்.
 

எ - டு :

வரிவயம் பொருத சினக்களிறு போல

இன்னு மாறாது சினனே

(புறம்-190)
 

அம்பண அளவை உறைகுவித் தாங்கு

கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும்

செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்

அலந்தனர் பெருமநின் உடற்றி யோரே

(பதிற்-71)
 

4. கொலையாவது :அறிவாற்றல்      புகழ்      முதலாயினவற்றைக்
கொன்றுரைப்பது. ‘கொன்றன்ன இன்னா’ என்பார் வள்ளுவர்.
 

எ - டு :

ஆற்ற லுடையோர் ஆற்றல் போற்றாதென்

உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்

துஞ்சுபுலி இடறிய சிதடன் போல

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே

(புறம்.-73)
 

எனவரும்
 

"வெறுப்பின் வந்த" என்றதனான் தலைவன் பரத்தைமை பற்றித் தலைவி
கொள்ளும் சினம்  முதலியவற்றை  இதனுள்  அடக்கிக்  கொள்க  என்பார்
பேராசிரியர்.   அகப்பொருள்  பற்றி  வருவனவற்றை  ஆசிரியர்  விதந்து
கூறுதலை ஈண்டு  இலேசினான் அடக்க வேண்டாமை  அறிக.  ஊடல்பற்றி
வரும் சினம் ஆண்டு "இல்லது காய்தல்" என்பதனுள் அடங்குமென்க.