சூ. 279 :உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை 
(3)
 

க - து :

உவமத்திற்குரியதொரு மரபு கூறுகின்றது
 

பொருள் : உவமத்தின்  மரபினைக்  கருதுங்கால்  அஃது   உயர்ந்த
பொருளின் மேலதாகும் என்று கூறுவர் புலவர். அஃதாவது; உவமிக்கப்படும் பொருளினும் (உவமேயத்தினும்)  உவமப்  பொருளின்கண் உவமத் தன்மை
உயர்ந்துள்ளதாக வேண்டும் என்றவாறு.
 

எ-டு : அரிமாவன்ன  அணங்குடைத்துப்பின்  திருமாவளவன்" எனவும்
"மாரியன்ன  வண்கைத்  தேர்வேளாய்" எனவும் "முழவுறழ் பணைத்தோள்"
எனவும் "தாமரை  புரையுங்  காமர்  சேவடி"  எனவும்   வரும். இவற்றுள்
பொருளினும்   உவமத்தின்கண்    உவமத்தன்மை    மிக்கு   நிற்குமாறு
கண்டுகொள்க. இனிக்,
 

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது 

போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ 

ஊர்தர வந்த பொருநனொடு 

ஆர்புனை தெரியல் நெடுந்தகை யோரே 

[புற-82]
 

என   இழிந்த    பொருள்   உவமமாக   வந்ததால் எனின்? அன்று.
போழ்தூண்டு   ஊசியின்   விரைவு   மற்றைய   பொருளின் விரைவினும்
மிக்கதாகலின் உவமத் தன்மை உயர்ந்ததன் மேற்றேயாமென்க.
  

"உள்ளுங்காலை"   என்றதனான்  உவமத்திற்கு  வேண்டுவன கற்பித்து
உயர்ந்ததாக்கிக் கோடலுமாமென்க.
 

எ - டு :

மாக விசும்பிற் றிலகமொடு பதித்த

திங்களன்ன நின்முகம்

[அகம்-253]
 

எனவரும்.