சூ. 226 :

உரிமை வேண்டினும் மகடூஉப்

பிரிதல் அச்சம் உண்மை யானும்

அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்குமென்று

அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும்

நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்

போக்கும் வரைவும் மனைவிகட் டோன்றும்

(30)
 

க - து :

தலைவி  நாண்கருதாது   உடன்போதற்கும்,  கொடுப்போரின்றி
வரைந்து கோடலைக் கருதற்கும் காரணம் ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :  மனைக்கிழத்தியாகி இல்லறம்   நிகழ்த்துதலை  உறுதியாக
விரும்புதலானும்   ஆள்வினை   காரணமாகப்   பிரிதல்     தலைவற்குக்
கடனாதலின்  தலைவன்  பிரிதலை  அஞ்சுதல் மகளிர்க்கு உளதாகலானும்,
களவொழுக்கத்தினைப் புறந்தார்க்குப் புலப்படுத்தும் என்று அஞ்சும்படியாக
வந்த    அம்பலும்   அலரும்  ஆகிய   இருநிலைமைகளானும்  செவிலி
முதலானோர்   தன்னை    ஐயுற்று   நோக்கும்  நோக்கொடு  தோன்றிய
தலைவனது       கூட்டத்திற்கு      இடையூறாகிய    பொருள்களானும்,
இச்செறிக்கப்பெற்று        மனையிடத்தாளாகிய        தலைவியின்பால்
தலைவனொடு உடன்போதலைக் கருதுதலும் ஆண்டு வரைந்து  கோடலைக்
கருதுதலும் முனைந்து தோன்றும்.
 

அறத்தொடு  நிலையான்  முறையாக   வரைதலைக்கருதாமல்   உடன்
போக்கினையும்        ஆண்டு         வரைதலையும்        கருதுதல்
அறக்கழிவுடையனவாயினும்  தலைவி   தன்  நாணினும் சிறந்த  கற்பினை
நோக்குதலின் அவை பொருள் மரபாயினவென்க. வரைதல்  வேட்கையைத்
தலைவற்கு   உணர்த்தாமல்  தலைவிதானே  மேற்கொள்ளக்   கருதுதலின்
அதனின் இது வேறாயிற்றென்க.
 

மனைவி     என்னும்     முறைப்பெயர்    வரைந்து    இல்லறத்தை
மேற்கொண்டபின்   அல்லது   எய்தாமையின்  ஈண்டு  மனைவி  என்றது
இற்செறிப்புற்ற தலைவி என்னும் பொருள்பட நின்றது.
 

எ - டு :

"உன்னங் கொள்கையொடு உளங்கரந் துறையும்

அன்னை சொல்லும் உய்கம், என்னதூஉம்

ஈரஞ் சேரா இயல்பிற் பொய்ம்மொழிச்

சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிதும்

நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற்

பாடிச் சென்ற பரிசிலர் போல

உவவினி வாழி தோழி அவரே

பொம்மல் ஓதி நம்மொடு ஓராங்குச்

செலவயர்ந் தனரால்இன்றே"

(அக-65)
 
என்பது உடன்போக்கிற்கு உடன்பட்டமை கூறிற்று.
 

"ஊர்அலர் எழச் சேரிக்‘கல்’லென

ஆனாது அலைக்கும் அறனில் அன்னை

தானே இருக்க தன்மனை, யானே

நெல்லிதின்ற முள்ளெயிறு தயங்க

உணல் ஆய்ந்திசினால் அவரொடு"
 

என்பது இடையூறு பொருளின்கட் போக்குடன் பட்டமை கூறிற்று.
 

ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்

தமியர் உறங்குங் கௌவை யின்றாய்

இனியது கேட்டின் புறகவிவ் வூரே

முனாதுயானையங் குருகின் கானலம் பெருந்தோடு

அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்

குட்டுவன் மாந்தை யன்னஎம்

குழல்விளங் காய்நுதற் கிழவனும் அவனே

(குறு-34)
 
இஃது உடன் சென்று வரையக் கருதுதல் கூறிற்று.