சூ. 311 :ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே 
(35)
 

க - து :

உவமத்தை மறுத்துரைத்தலும் உவமவிலக்கண வழக்கு
என்கின்றது.
 

பொருள் :உவமம் வேறுபட வருதலேயன்றி உவமத்தைப் பொருளொடு
பொருந்தாதென  உவமத்தன்மையை  நீக்கிக் கூறலும் மேற்றொட்டு மரபாக
மருவிய இலக்கணமேயாம்.
 

என்றது : ஒப்புடைய  பொருளை  உவமமாக  எடுத்துக்கொண்டு அதன்
உவமத்தன்மையை      ஒவ்வாதென    மறுத்து     நீக்கிக்     கூறலும்
உவமத்தோற்றமேயாம் என்றவாறு.
 

எ - டு :

தவள முத்தங் குறுவாள் செங்கண்

குவளை யல்ல கொடிய கொடிய

(சிலம்பு-கானல்வரி)
 

புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்

வெள்வே லல்ல வெய்ய வெய்ய

(சிலம்பு-கானல்வரி)
 

எனவரும். இவற்றுள் கண்களுக்கு  மேற்கோளாக எடுத்துக் கொள்ளப்பட்ட
குவளையும், வேலும்   முறையே, அவள்   கண்கள்    கொண்டு  நிற்கும்
கொடுமையையும்   வெப்பத்தையும்  பெறாமையான் ஒரீஇக்  கூறியமையும்,
கொடுமையையும் வெப்பத்தையும் அவள்  கண்கள் நீக்கியவிடத்து  அவை
உவமமாக மருவுதற்கு ஒக்குமெனக் கொள்ளவைத்தமையும் கண்டு கொள்க.
 

காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

மாணிழை கண்ணொவ்வே மென்று

(குறள்-114)
 

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி

(குறள்-1119)
 

என    வருவனவும்   அதன்பாற்பாடும். பிறவும்  இவ்வாறு வருவனவற்றை
ஓர்ந்தமைத்துக் கொள்க.