சூ. 94 :

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோ னாயினும் கடிவரை யின்றே

(2)
 

க - து :

தெய்வமணமாகிய    காமக்கூட்டம் நேர்தற்கு ஏதுவும் அங்ஙனம்
கூடும் கிழவன் கிழத்தியரது தகவும் ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஒன்றுபடுத்துவது    வேறுபடுத்துவது என்று சொல்லப்படும்
இருவகை ஊழினிடத்தே பொருந்தி, ஒன்றுபடுத்தலைச் செய்யும்    உயர்ந்த
ஊழினது    ஆணையானே   பிறப்பு முதலாயவற்றான் ஒத்த தலைமகனும்
தலைமகளும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டுக்   காண்பார்.     ஒப்புமைக்
கூறுகளுள்     சிலவற்றான்    தலைமகன் மிக்கானாயினும் அவ்வேறுபாடு
காரணமாக அவர்தம் தலைமைப்பாடு நூலோரான் கடியப்படுதலில்லை.
 

அக    ஒழுக்கமாகிய    ஐந்திணை  நிகழ்ச்சிகள் யாவும் கூடியிருத்தல்
பிரிந்திருத்தல்      என்னும்      இருவகையாயே           நிகழ்தலின்
ஒன்றுபடுத்தல்-வேறுபடுத்தல்     எனப்     பாலும்   (ஊழ்வினை)   இரு
வகைத்தாயிற்று.
 

அகனைந்திணையாகிய  ஒழுக்கத்தை மேற்கொள்ளும் தலைமக்கள் அவ்
இருவகை  (புணர்தல்-பிரிதல்)     ஊழின்பாற்பட்டு        இயங்குதலான்
இருபால்வயின் ஒன்றி என்றார். ஒன்றி என்னும் செய்தெனெச்சம்   காண்ப,
என்பதனொடு      முடியும்.     பால்    என்றது பால்வரை தெய்வத்தை.
தெய்வப்புணர்ச்சி நிகழ்தற்கு ஏதுவானமையான் ஒன்றுபடுத்தும்    பாலினை
உயர்ந்தபால் என்றார். இன்பமே பயத்தலின் அஃது உயர்ந்ததாயிற்று.
 

இதனை "இம்மை போலக் காட்டி யும்மை

இடையில் காட்சி நின்னொடு

உடனுறை வாக்குக உயர்ந்த பாலே"

(புற-236)
 

எனவரும்    கபிலர்    கூற்றானறிக.  ஒப்புமையாவது, மெய்ப்பாட்டியலுள்
கூறப்படும்.
 

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு 

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருவென

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”

(மெய்-26)
 

என்னும் பத்துவகை    ஒப்புமைகளையாம். தலைவன் மிகுதல் குலத்தானும்
அகவையானும்    மிக்கிருத்தல் - தலைவி உருவான் மிகுதல் சிறுபான்மை
தலைவன் கூற்றின்கண்வரும்.
 

இனி உரையாசிரியன்மார், ஒன்றி என்பதனை உயர்ந்தபால்  என்பதற்கு
அடையாகக் கொண்டு பொருள் கூறுவர். ஒன்றே வேறே       என்பதற்கு
நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் நூல் நெறிக்கு ஒவ்வுமாறில்லை.
 

இது அகத்திணையியலுள் "கலந்த பொழுதும்    காட்சியு   மன்ன" (18)
எனச் சார்பு உரிப்பொருளாகக் கூறப்பட்டவற்றுள் ஒரு கூறாகிய    ‘காட்சி’
யாகும்.