சூ. 111 :

காமஞ் சொல்லா நாட்ட மின்மையின்

ஏமுற இரண்டும் உளவென மொழிப

(19)
 

க - து :

மேற்கூறிய பொருள் பற்றியதோ ரையமகற்றுகின்றது.
 

பொருள் :அகத்தெழும்   வேட்கையை   உணர  உரையாத கண்கள்
காதலர்   மாட்டு    யாண்டுமின்மையான்    தலைவனது      காதன்மை
ஏமுறுதற்பொருட்டு  அவ்இரண்டும்   தலைவியிடத்து நீங்காமல் உளவாகும்
எனக்கூறுவர் புலவர்.
 

தலைவி   உரைமொழியாற் புலப்படுத்தாத வழி அவளது வேட்கையைத்
தலைவன் உணருங்கொல்? கூற்றினாற் புலப்படுத்துமாயின் நாணும்  மடனும்
வரையிறவாது   நிற்குங்கொல்?   என  ஐயம் நிகழுமன்றே? அது நோக்கி
ஆண்டுத்தலைவி கூற்று இவ்வாறு நிகழும் என்பாராய்க் "காமஞ்  சொல்லா
நாட்ட மின்மையின்" என்றார். நாணும்  மடனுமாகிய பெண்மைக் குணங்கள்
தலைவற்கு இன்பஞ் செய்யும்    என்பார். "ஏமுற இரண்டும் உள" என்றார்.
இஃது அகப்பொருள்  நூலோர்க்கு   ஒப்ப   முடிந்த கருத்தென்பார் "என
மொழிப" என்றார்.
 

நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக்

கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்.
 

என   முன்னர்ப்   பொதுப்படக்   கூறிய  "குறிப்புரை"  தலைவிக்குச்
சிறந்துரிமையாகி நிற்கும் என்பதும் ‘அச்சமும் நாணும் மடனும்  முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்   குரிய என்ப’  என்றவற்றுள் நாணும் மடனும் களவுத்
தலைவிக்கு   நிலைபேறுடையவை   என்பதும்   அவை தலைவனது காதற்
கேண்மைக்கு ஏமமாகும் என்பதும் தெளியப்படும்.