சூ. 302 :கிழவி சொல்லின் அவளறி கிளவி
(26)
 

க - து: 

இச்சூத்திர  முதலாக  எட்டுச் சூத்திரங்கள் அகஒழுக்கத்தின்கண்
உவமப்போலி  கூறுதற்குரிய   மாந்தரையும்   அவர்   கூறும்
முறைமையும் பற்றியனவாம். இச்சூத்திரம் தலைவி  உவமப்போலி
கூறுமாறு    இதுவென்கின்றது.     உவமப்போலி     என்பது
அதிகாரத்தான் வந்தது.
 

பொருள் :உவமப்போலியைத்  தலைவி   கூறுமாயின்  அஃது அவள்
அறிந்த பொருள்பற்றிவரும். ‘கிளவி’ என்றது பொருளை.
 

எ-டு :

ஒன்றேனல்லேன் ஒன்றுவென் [குறுந்] என்னும் செய்யுளுள்

"பொருகளிறு மிதித்த நெறிதாள் வேங்கை

குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்

நின்று கொய மலரும்"
 

என்னும்   உள்ளுறைக்கிளவி   தலைவி  நாடொறும் படப்பையுள் காணும்
பொருளாதலின் அஃது அவளறி கிளவியாதல் காணலாம்.
 

‘’பொய்கைப்பள்ளி  புலவுநாறு  நீர்நாய்   வாளை  நாளிரை பெறூஉம்
ஊரன்’’  [ஐங்-62]  என்பதும்  அவளறிந்த கிளவியே யாம்.  "தன்பார்ப்புத்
தின்னும்  அன்பில் முதலையொடு  வெண்பூம் பொய்கைத்தவனூர்" [ஐங்-41]
என்பதனுள் வரும் கருப்பொருள் அவள் கேட்டறிந்து கொண்டவையாதலின்
அவளறிகிளவியேயாம்.
 

இவ்வாறு  வருவனவற்றைத்  தோழி கூற்றெனக் கருதுவார் பேராசிரியர்.
அதற்கு அவர் கூறுங்காரணம் பொருந்தாமை யறியலாம்.