சூ. 234 : | கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும் |
| உள்ளத்து ஊடல் உண்டென மொழிப |
(38) |
க - து : | தலைவி கூற்றினுள் இசைதிரிந்திசைக்கும் ஒருசார் பொருண்மை கூறுகின்றது. |
பொருள் : கற்புநெறி பற்றி உயர்ந்து ஒழுகும் தலைவி தண்ணளி காரணமாக ஒரோவழிப் பரத்தையைப் பாராட்டிப் பேசினும் அவள் உள்ளத்தே ஊடலுறுந்தன்மை உண்டென்று கூறுவர் புலவர். |
ஏத்தினும் என்னும் எதிர்மறை உம்மை அதன் அருமை தோன்ற நின்றது. உள்ளத்து ஊடல் உண்டு என்றதனான் ஏத்துதல் தலைவனது குறிப்பினை உணரும் பயத்தாக நிற்கும் என்க. இஃதுவரும் சூத்திரத்தானும் விளங்கும். |
எ - டு : | நாயுடை முதுநீர் கலித்த தாமரைத் |
| தாதின் அல்லி அவிர்இதழ் புரையும் |
| மாசில் அங்கை மணிமருள் செவ்வாய் |
| நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் |
| யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் |
| தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே |
| கூர்எயிற் றரிவை குறுகினள் யாவரும் |
| காணுநர் இன்மையின் செத்தனள் பேணி |
| வருகமாள என்உயிர் எனப்பெரிது வந்து |
| கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன் |
| மாசில் குறுமகள் ! எவன்பே துற்றனை |
| நீயும் தாயை இவற்கென யான்தற் |
| கரைய வந்து விரைவனென் கவைஇ |
| களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா |
| நாணி நின்றோள் நிலைகண்டு யானும் |
| பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்து |
| அணங்கருங் கடவுள் அன்னோள்நின் |
| மகன் தாயாதல் புரைவதாங் கெனவே |
(அக-16) |
எனத் தலைவி பரத்தையை ஏத்தினமையும், நீயும் தாயை இவற்கு எனவும், மகன் தாயாதல் புரைவது எனவும் கூறினமையான் உள்ளத்து ஊடல் அமைந்துள்ளமையும் கண்டு கொள்க. |