சூ. 280 :

சிறப்பே நலனே காதல் வலியொடு

அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப

(4)
 

க - து :

உவமங்கூறுதற்கு    அடிப்படைப்    பொருள்கள்    ஆமாறு 
கூறுகின்றது.
 

பொருள் :ஒருவர்  ஒரு  பொருளை  விளக்கப் பிறிதொரு பொருளை
உவமமாக்கிக்   கூறுதற்கு  அடிப்படை  அப்பொருளின்கண் அமைந்துள்ள
சிறப்பு,  நலன், காதல்,  வலி ஆகிய அந்நான்கு பண்புகளும் எனக்கூறுவர்
புலவர்.
 

இந்நான்கொடு   கிழக்கிடு   பொருளும்   நகை  முதலாய சுவைகளும்
காரணமாகி   வருதலின்  நான்கே  எனத் தேற்றேகாரம்  கொடாது இவை
சிறப்புடையன என்று  சுட்டுதற்கு அந்நாற்  பண்பும்  என்றார்.  ஏகாரமும்
ஒடுவும் எண்ணுப்பொருளன.
 

சிறப்பு,   நலன்,  வலி  என்பவை   அப்பொருளின்கண் அமைந்துள்ள
பண்புகள். காதல்  என்பது கூறுவோன்  அப்பொருளின்கண்  கொண்டுள்ள
பேரன்பு. சிறப்பாவது : கருதி மகிழத்தக்க உயர்வு.
 

எ - டு :

முரசுமுழங்கு தானை மூவரும் கூடி

அரசவை யிருந்த தோற்றம் போலப்

பாடல் பற்றிய பயனுடை எழாஅல்

(பொரு.54-56)
 

எனவரும்.  மூவேந்தரும்  ஒருங்கு  இணைந்துறைதல் அரிதாக நிகழ்தலின்
சிறப்புடைத்தாயிற்று.   அவ்வுவமத்தான்   கூத்தும்  இசையும்  வாச்சியமும்
ஒருங்கொத்து நிகழ்கின்றமையைப்   புலப்படுத்தலின் அப்பாடலின்  சிறப்பு
உணர்த்தப்பட்டவாறு   கண்டு   கொள்க.  நலனாவது : வனப்பு  முதலிய
கவினுறு பண்புகள்.
 

எ - டு :

 ஓவத்தன்ன இடனுடை வரைப்பின் 
(புற-25)
 

இதன்கண்   புனையப்பெறும்   ஒவியத்தை   உவமங்  கூறியவதனான்
வளமனையின் செயற்கையழகு புலப்படுமாறு  கண்டு கொள்க.  காதலாவது :
தன்னலம் விழையாத பேரன்பு.
 

எ - டு :

என்கைக் கொண்டுதன் கண்ணொற்றியும்

தன்கைக் கொண்டென் நன்னுதல் நீவியும்

அன்னை போல இனிய கூறியும்

(நற்-28)
 

இதன்கண்   கைம்மாறு   கருதாத  அன்னையை உவமங் கூறியதனான் தலைவனது    பேரன்பு    புலனாதலைக்   கண்டுகொள்க.   வலியாவது :
மாற்றருந்துப்பு.
 

எ - டு :

அரிமா அன்ன அணங்குடைத்துப்பின் திருமாவளவன்.
  

இதன்கண்   அரிமாவினை   உவமங்   கூறியதனான்  வளவனின் பிற
பண்புகளினும் மிக்க அவனது வலிமை புலனாதல் காண்க.