சிறப்பு, நலன், வலி என்பவை அப்பொருளின்கண் அமைந்துள்ள பண்புகள். காதல் என்பது கூறுவோன் அப்பொருளின்கண் கொண்டுள்ள பேரன்பு. சிறப்பாவது : கருதி மகிழத்தக்க உயர்வு. |
எ - டு : | முரசுமுழங்கு தானை மூவரும் கூடி |
| அரசவை யிருந்த தோற்றம் போலப் |
| பாடல் பற்றிய பயனுடை எழாஅல் |
(பொரு.54-56) |
எனவரும். மூவேந்தரும் ஒருங்கு இணைந்துறைதல் அரிதாக நிகழ்தலின் சிறப்புடைத்தாயிற்று. அவ்வுவமத்தான் கூத்தும் இசையும் வாச்சியமும் ஒருங்கொத்து நிகழ்கின்றமையைப் புலப்படுத்தலின் அப்பாடலின் சிறப்பு உணர்த்தப்பட்டவாறு கண்டு கொள்க. நலனாவது : வனப்பு முதலிய கவினுறு பண்புகள். |
எ - டு : | ஓவத்தன்ன இடனுடை வரைப்பின் |
(புற-25) |
இதன்கண் புனையப்பெறும் ஒவியத்தை உவமங் கூறியவதனான் வளமனையின் செயற்கையழகு புலப்படுமாறு கண்டு கொள்க. காதலாவது : தன்னலம் விழையாத பேரன்பு. |
எ - டு : | என்கைக் கொண்டுதன் கண்ணொற்றியும் |
| தன்கைக் கொண்டென் நன்னுதல் நீவியும் |
| அன்னை போல இனிய கூறியும் |
(நற்-28) |
இதன்கண் கைம்மாறு கருதாத அன்னையை உவமங் கூறியதனான் தலைவனது பேரன்பு புலனாதலைக் கண்டுகொள்க. வலியாவது : மாற்றருந்துப்பு. |
எ - டு : | அரிமா அன்ன அணங்குடைத்துப்பின் திருமாவளவன். |
இதன்கண் அரிமாவினை உவமங் கூறியதனான் வளவனின் பிற பண்புகளினும் மிக்க அவனது வலிமை புலனாதல் காண்க. |