சூ. 260 :

செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று

அல்லல் நீத்த உவகை நான்கே

(11)
 

க - து :

செல்வம்   முதலிய    நான்கும்   பற்றி    உவகை   பிறக்கும்
என்கின்றது.
 

பொருள் :உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகிய பொருள்,
அல்லல்  தவிர்ந்த  செல்வம்,  புலன்,  புணர்ச்சி,  விளையாட்டு  என்னும்
நான்குமாமெனக் கூறுவர் புலவர். அல்லல்  நீத்த  என்பதனைச்  செல்வம்
முதலிய நான்கினோடும் கூட்டுக.
 

செல்வம் முதலிய நான்கும் அறத்தொடு கூடி  வாராவிடத்துத் தனக்கும்
பிறர்க்கும்  அவை  வருத்தமும்  செய்வனவாதலின் "அல்லல்  நீத்த" எனச்
சிறப்பித்துக் கூறினார் என்க.
 

1. செல்வமாவது :பொருட்  செல்வமேயன்றி    அறுசுவை   உண்டி
முதலிய  நுகர்பொருளும்,   ஆடையணி  முதலாய  துய்த்தற்  பொருளும்,
கொடியும் படையும் முதலிய அரசச் செல்வமுமாம்.
 

எ - டு :

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லார்க்கும் கொடுமதி மனைகிழ வோயே

பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேற் குமணன் நல்கிய வளனே.

(புறம்-163)
 

எனவும் ....... ...... .......... ........ .......... ......... ........ இரவல
 

வென்வே லண்ணற் காணா வூங்கே

நின்னினும் புல்லியேம் மன்னே, இனியே

இனன் மாயினேம் .... .... ..... .....

(புறம்-141)
 

எனவும் வரும். இது தன்கண்ணதாய் நிகழவரும்.
 

2. புலனாவது :ஊழான்    அமைந்த     தன்னுணர்வான்   எய்தும்
உண்மையறிவாகிய புலமைப் பேறு.
 

எ - டு :

வழிபடு வோரை வல்லறி தீயே

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே

நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி

வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்

தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே

(புறம்-10)
 

இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ

நகலின் இனிதாயிற் காண்பாம் - அகல்வானத்து

உம்பர் உறைவார் பதி

(நாலடி-137)
 

எனவரும். இஃது இருபாலும் பற்றிவரும்.
 

3. புணர்வாவது :ஒன்றியுயர்ந்த     பாலதாணையாற்    பொருந்திய
தலைவனும்   தலைவியும்   எய்தும்   உள்ளப்   புணர்ச்சியும்,  மெய்யுறு
புணர்ச்சியுமாம்.  "அல்லல்   நீத்த"  என்றதனான்  உயிரோரன்ன  நட்பிற்
புணர்ச்சியுமாம் எனக் கொள்க.
 

எ - டு :

தம்மில் லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு

(குறள்-1107)
 

எனவரும்.
 

"விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்"

என்னும் குறுந்தொகைச் செய்யுளும் அது.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

(குறள்-783)
 

எனவும் வரும். இது தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும்.
 

4. விளையாட்டாவது : உள்ள  மொத்தாரொடு  கூடிச்  சோலைபுக்கு
விளையாடலும்,  குரவை  முதலிய   ஆடலும்,  இகலின்றிப்  புரியும்  வீர
விளையாட்டுமாம்.
 

எ - டு :

மேவர, நான்மாடக்கூடல், மகளிரும் மைந்தரும்

தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார்

ஆனா விருப்பொடு அணியயர்ப, காமற்கு

வேனில் விருத்தெதிர் கொண்டு

(கலி-92)
 

எனவும்
 

வையை வருபுனல் ஆட லினிதுகொல்

செவ்வேற்கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்

(பரிபாடல் திரட்டு)

எனவும் வரும்.
 

துயிலின்றி யாம்நீந்த தொழுநையம் புனலாடி

மயிலியலார் மருவுண்டு மறந்தமைகுவான் மன்னோ

(கலி. 30)
 

என்பது  காட்டுவார்  பேராசிரியர்.  இன்னோரன்ன அல்லல் நீத்த உவகை
எனற் கேலாமை கண்டு கொள்க.
 

இம்முப்பத்திரண்டு பொருளும் நாடகச் சுவைக்கும் உரிமையுடையனவாய்
நகை   முதலாய    எண்வகை    மெய்ப்பாடுகட்குச்   சிறப்புடையனவாய்
அகத்திற்கும்  புறத்திற்கும்   பொதுவாய்  அமைந்து  வருதலின்  இவற்றை
முதற்கண்விதந்தோதினார் என்க.