சூ. 266 :

தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்

கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு

பொருந்திய நான்கே ஐந்தென மொழிப

(17)
 

க - து :

தெரிந்துடம்படுதல் முதலிய நான்கும் ஐந்தாங் கூறு என்கிறது.
 

பொருள் :தெரிந்துடம்படுதல்,  திளைப்புவினை  மறுத்தல்,  கரந்திடத்
தொழிதல்,  கண்டவழியுவத்தல்  எனப்பொருந்திய  நான்கும்  ஐந்தாங்கூறு
எனப்புகல்வர் ஆசிரியர்.
 

இவை களவியலுட் கூறிய,  “மனைப்பட்டுக்  கலங்கிச்  சிதைந்த  வழித்
தோழிக்கு   நினைத்தல்   சான்ற   அருமறை    உயிர்த்தலும்,  அருமை
செய்தயர்ப்பினும்,  வழிபாடு   மறுத்தல்,  பெற்றவழி  மலியினும்”  (கள-21)
எனவரும்   கிளவி  முதலியவற்றிற்குரியவாக   நிகழும்  மெய்ப்பாடுகட்குப்
பொருள்களாம் என்பதை வலியுறுத்தப் ‘பொருந்திய நான்கு’ என்றார்.
 

1. தெரிந்துடம் படுதலாவது :   தலைவன்       ஒருவழித்தணத்தல்
முதலியவற்றையும்,  வரைவுநீட்டித்தலையும்  அம்பலும்,  அலரும்  எழுந்து
பரவுதலையும்  தாயர்   வெறியாட்டு   முதலியவற்றை   நிகழ்த்துதலையும்
பிறவற்றையும்   ஆராய்ந்து    இனிச்    செயற்பாலனவற்றைத்   தேர்ந்து
அறத்தொடுநிலை வாயிலாகத் தனது நிலைமையைத்  தெரிவிக்கத்  தலைவி
உள்ளம் நேர்தல்.
 

உடம்படுதல்  என்பது  ஈண்டுத்  தெரிவித்தல்   என்னும்  பொருள்பட
நின்றது.  பொதுப்படக்   கூறியுள்ளமையான்   தலைவி   உடம்போக்கிற்கு
உடம்படுதலும் கொள்க.
 

எ - டு :

                        ...............அன்னை

எவன்செய் தனையோநின் இலங்கெயிறு உண்கென

மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து

உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து

உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்

காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி

தீந்தொடை நரம்பின் இமிரும்

வான்தோய் வெற்பன் மார்பணங் கெனவே

(நற்-17)
 

எனவரும். இஃது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

2. திளைப்புவினை மறுத்தலாவது :   தலைவனது     வருந்தொழிற்
கருமையும் இடையூறும் எண்ணித் தலைவி  வரைவு  கடாதற்  கருத்தினான்
இருவகைக்குறிக்கண்ணும்  இடையீடு  செய்து  கூட்டத்தைத்  தவிர்த்தலாம்.
தவிர்த்தலை மறுத்தல் என்றார்.
 

எ - டு :

கருங்கற் கான்யா றருஞ்சுழி வழங்கும்

கராஅம் பேணாய் இரவரின்

வாழேன் ஐய மைகூர் பனியே

(நற்-292)
 
எனவும்
 

குடிமுறை புரக்கும் நெடுமலை நாட

உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும்

இரவின் அஞ்சாய், அஞ்சுவல் இரவின்

ஈரளைப் புற்றம் காரென முற்றி

இரைதேர் எண்கினம் அகழும்

வரைசேர் சிறுநெறி வாரா தீமே

(நற்-336)
 

எனவும் வரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்.
 

3. கரந்திடத் தொழிதலாவது :தலைவனைக் கண்டவழி உளந்தடுமாறு
மென  அஞ்சி  அவன்  காணாவகையிற்  கரந்து  மனையிடத்து  அடங்கி
அவனின் நீங்கியிருத்தல். ஒழிதலாவது தலைவன் வழியமையாது தவிர்த்தல்.
தங்குதல் எனக்  கருத்துப்  பொருள்  கூறுவர்  உரையாசிரியன்மார்.  அது
சொற் பொருளாகாமை எழுத்ததிகாரத்து விளக்கப்பட்டது.
 

எ - டு :

யாவதும் அறிகிலர் கழறு வோரே

தாயில் முட்டை போல உட்கிடந்து

சாயின் அல்லது பிறிதெவன் உடைத்தே

யாமைப் பார்ப்பின் அன்ன

காமங் காதலர் கையற விடினே

(குறு-152)
 

எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

4. கண்டவழி உவத்தலாவது :   கரந்துறைதலால்    ஆற்றாமைமிக்கு
வருந்திப்  புலம்பியிருக்குங்கால்  தலைவன்  ‘புகாஅக்  காலை  புக்கெதிர்
பட்டுழியும் பகாஅ விருந்தின் பகுதியாய  வழியும்’ (கள-17) கண்டு  பெருங்
களிப்புறுதல்.
 

எ - டு :

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு

(குறள்-1281)
 

இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.