சூ. 303 :தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது
(27)
 

க - து:

உவமப்போலி தோழி கூற்றின்கண் அமையுமாறு கூறுகின்றது.
 

பொருள் :உவமப்போலி   தோழி  கூற்றிற்கு  உரியதாகிவரின் அஃது
அந்நிலத்துக் கருப்பொருளின்றும் பெயர்ந்துரைத்தலாக அமையாது: என்றது.
தோழி   அத்திணைக்குரிய   நிலத்தில்  உள்ள   கருப்பொருள்   பற்றிக்
கூறுவதல்லது பிற  நிலத்துள்ள  பொருள்  பற்றிக்  கூறுவாளாகச் செய்யுள்
செய்தல் அமையாது என்றவாறு.
 

எ - டு:

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்

கருவி மாமழை வீழ்ந்தென அருவி

விடரகத் தியம்பும் நாட

(குறு-42)

என்பது     குறிஞ்சித்திணையுள்   தோழி   கூற்று. இதனகத்து வந்துள்ள
அருவியும் விடரகமும் அந்நிலத்துப் பொருளாயுள்ளமை தெளிவாம்.
 

யாரினும் இனியன் பேரன் பினனே 

உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் 

சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் 

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் 

நாறா வெண்பூக் கொழுதும் 

யாணர் ஊரன் பாணன் வாயே 

[குறு-85]
 

இது மருதத்திணையுள் தோழி கூற்று.
 

முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை 

புணரி இடுதிரை தரூஉம் துறைவன் 

புணரிய இருந்த ஞான்றும் 

இன்னாது மன்னோ நன்னுதற் கவினே  

(குறு-109)
 

இது நெய்தல் திணையுள் தோழிகூற்று.
 

கொடுங்கட் காக்கைக் கூர்வாய்ப் பேடை 

நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து 

கருங்கட் கருணைச் செந்நெல் வெண்சோறு 

சூருடைப் பலியொடு கவரிய குறுங்காற் 

கூழுடை நன்மனை குழுவின இருக்கும் 

மூதில் ....... ....... ........ ......... .......... 

(நற்-367)
 

இது முல்லைத்திணையுள் தோழி கூற்று. பிறவும் அன்ன.
 

"நிலம்பெயர்ந்   துரையாது"   என   எதிர்மறை  முகத்தாற் கூறினமையின்
சிறுபான்மை பிற நிலத்திற்குரிய மாவும் மரமும்  மயங்கிவரினும் அமைத்துக்
கொள்ளப்படும்.