சூ. 206 :

தன்வயிற் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்

அன்ன இடங்கள் அல்வழி யெல்லாம்

மடனொடு நிற்றல் கடனென மொழிப

(10)
 

க - து : 

இது  தலைவி மடனொடு நிற்குமிடமும்  மடனழிய நிற்குமிடமும்
இவை  எனக்  கூறுகின்றது.  ‘தலைவி’  என்பது அதிகாரத்தான்
வந்தது.
 

பொருள்:  தலைவன்  புறத்தொழுக்கத்தைத் தலைவியிடத்து மறைத்து
உரைத்தலும், தலைவனது   கூட்டத்தைத்   தலைவி விரும்புதலும்  ஆகிய
அந்நிலைமையல்லாத       மற்ற      இடங்களிலெல்லாம்      தலைவி
மடப்பத்தையுடையளாகி நிற்றல் கடப்பாடு என்று கூறுவர் நூலோர்.
 

எனவே அவ் ஈரிடத்தும் மடனழிய  நிற்பாள் என்பதாயிற்று.  மடனழிவு
என்றது   தலைவன்   கொளுத்துவன  கொள்ளாமல்  அவற்றை  மாறுபட
எண்ணியுறழ்தலாம்.
 

எ - டு :

"யாரைநீ எம்மில் புகுதர்வாய்" என்னும் மருதக் கலியுள்
(98) தலைவன் "வையை வருபுனல் ஆடத் தவிர்ந்தேன்"
 

என்றவழி
 

ஒ! புனலாடினாய் எனவும் கேட்டேன் புனலாங்கே

நீள்நீர் நெறிகதுப்பு வாரும் அறலாக

மாண்எழில் உண்கண் பிறழும் கயலாக

கார்மலர் வேய்ந்த கமழ்பூம் பரப்பாகம்

நாணுச் சிறையழித்து நன்பகல் வந்தஅவ்

யாணர்ப் புதுப்புனல் ஆடினாய் முன்மாலை

பாணன் புனையாகப் புக்கு"
 

எனத் தலைவனது புறத்தொழுக்கத்தை எள்ளி உரைத்தமை காண்க.
 

"யாரிவன்   எம்கூந்தல்  கொள்வான்"  என்னும்  மருதக்  கலியுள் (99)
"இன்னகை! தீதோ இலேன்"! என்ற தலைவனைத் துனியான் முனியாது
 

"மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்

புறம்சாய்த்துக் காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்திவனைப்

பொய்ப்ப வீடேஎம்என நெருங்கின் தப்பினேன்
 

என்றடி   சேர்தலும்   உண்டு" என  அவன்வயின்   வேட்டல்   ஏதுவாக
நெஞ்சிற்குக் கூறியமை கண்டு கொள்க.
 

"அன்ன"   இடன்     என்றதனான்   தலைவன்பாற்   புறத்தொழுக்கு
இல்லையாகவும் உள்ளதெனக் கற்பித்துக்கொண்டு கூறலும் கொள்க.
 

எ - டு :

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று

(குறள்-1314)
 
எனவரும்.