சூ. 294 :நாலிரண் டாகும் பாலுமா ருண்டே
(18)
 

க - து :

உவமத்திற்கு  நிலைக்களம்  சிறப்பு   நலன்  காதல்  வலி 
கிழக்கிடு  பொருள்  எனப்பட்டவையேயன்றி   எண்வகைச்
சுவையும் நிலைக் களமாக அமையும் என்கின்றது.
 

பொருள் :உவமத்திற்கு   நிலைகளம்   எட்டாகும்  பக்கமும் உண்டு.
உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஏகாரம்  அசைநிலை.  நாலிரண்டு
என்றது  மெய்ப்பாட்டியலுள்  கூறிய நகை முதலாய நாடகச்சுவைகளையாம்.
என்னை? மெய்ப்பாட்டியலுள், ஆசிரியர்.
 

‘’பண்ணைத்   தோன்றிய  எண்ணான்கு  பொருளும் கண்ணிய புறனே
நானான்    கென்ப’’    எனக்கூறிப்   பின்னர்க்   கண்டு சுவைப்போரை
அடிப்படையாகக்  கொள்ளுமிடத்து. "நாலிரண்  டாகும் பாலுமா  ருண்டே"
எனக்    கூறினாராகலின்   ஆண்டுக்  கூறிய நாடகச்   சுவையாகிய அவ்
எட்டனையும்   சுட்டி உணரும்   வண்ணம்   அவ்வாய்பாட்டானே ஈண்டு
‘’நாலிரண்டாகும் பாலுமாருண்டே" என்றார்.
 

நாடகத்திற்குரிய   சுவை  எட்டும்  இயற்றமிழின்கண் செய்யுளுறுப்பாக
அமைந்து   பொருள் புலப்பாடு   செய்யுமிடத்து  அவை மெய்ப்பாடாகும்.
நாடகக் காட்சியாகக் காண்போரின்  உணர்வளவே   நிகழுமிடத்து அவை
சுவையாகும் என்பது மெய்ப்பாட்டியலுள் விளக்கப்பட்டது.
 

எனவே உவமந்தோன்றுவதற்கு அடிப்படை உள்ளத் துணர்வேயாகலான்
சுவைப்போரின்  எண்வகைச்  சுவையும் நிலைக்களனாக அமையும் என்பது
இச்சூத்திரத்தான் உணர்த்தப்பட்டதென அறிக.
 

இதனை,  உவம நிலைக்களம் பற்றிக் கூறிய "சிறப்பே நலனே" என்னும்
சூத்திரத்தின்     பின்வைத்து       ஒருங்கோதாமல்         இங்ஙனம்
பிரித்துணர்த்தியமைக்குக்   காரணம், சிறப்பு   நலன்  முதலிய  பண்புகள்
உவமிக்கப்படும் பொருட்கண் அமைந்து  கிடப்பவையாகும்.  சுவையுணர்வு
உவமிக்கப்படும்   பொருளின்   பண்பும்   செயலும்  காரணமாக  உவமங்
கூறுவோனிடத்து அமைந்து வருபவை ஆதலின் பிரித்துக் கூறினார் என்க.
 

எ - டு :

1. நகை :

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை யரக்கண் வௌவிய ஞான்றை

நிலஞ்சேர் மதரணி கொண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு

அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே

(புறம்-278)
 

இஃது   இளஞ்சேட்   சென்னி  வழங்கிய அருங்கல வெறுக்கைகளைப்
பாடினிமார்,  அணியும் முறையறியாது   மாற்றிப்  பூண்டமையான்  எழுந்த
நகையாதலின் இவ்வுவமத்திற்குப்   பேதைமை  காரணமாக  எழுந்த  நகை
என்னும் சுவை நிலைக்களமாக அமைந்தமை கண்டுகொள்க.
 

"களவுடம்   படுநரிற்   கவிழ்ந்து    நிலங்கிளையா  நாணி நின்றோள்
நிலை கண்டுயானும் பேணி னெனல்லெனோ" என்னும் உவமம் பரத்தையின்
அப்போதைய  நிலை காரணமாக   எழுந்தது. இதற்கு   எள்ளல்   பற்றிய
நகைச்சுவை நிலைக்களமாயினமை கண்டு கொள்க.
 

2. உவமம் :

நீர்வார் நிகர்மலர் கடுப்பவோ மறந்து

அறுகுளம் நிறைக்குந போல அல்கலும்

அழுதல் மேவல வாகிப்

பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே

(அகம்-11)
 

என்பது    தலைவியின்    அப்போதைய    நிலையை   விளக்க எழுந்த
உவமமாதலின் இதற்கு அவலச்சுவை நிலைக்களமாயினமை கண்டுகொள்க.
 

3. இளிவரல் :

"வைகுநிலை மதியும் போலப் பையெனப்

புலம்புகொள் அவலமொடு புதுக்கவி னிழந்த

நலங்கெழு திருமுகம்"

(அகம்-299)
 

என்பது   பருவரல்   எவ்வமொடு  அழிந்த  பெருவிதுப்புறுவி   பேதுறும்
அப்போதைய  நிலைகண்டு  தலைவன் கூறியதாகலின்   இவ்வுவமத்திற்குத்
தலைவன்     உள்ளத்தெழுந்த    மென்மை   பற்றிய  இளிவரற்   சுவை
நிலைக்களமாயினமை கண்டு கொள்க.
 

பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல 

வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு 

(முத்தொள்-88)
 

என்பதுமது.   தலைவி    தன்னெஞ்சினை  வேறு நிறீஇக் கூறினமை யான்
தலைவி சுவைப்போளாயினாள் என்க.
 

4. மருட்கை :

அடகின் கண்ணுறை யாக யாம்சில

அரிசி வேண்டினே மாகத் தான்பிற

வரிசை யறிதலின் தன்னுந் தூக்கி

இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்

பெருங்களிறு நல்கி யோனே, அன்னதோர்

தேற்றா ஈகையும் உளதுகொல்

(புறம்-140)
 

என்பது   நாஞ்சில்   வள்ளுவனுடைய   வள்ளன்மை   எதிர்பாரா அளவு
உயர்ந்தமை   நோக்கிக்      கூறியதாகலின்      இதற்கு   ஒளவையின்
உள்ளத்திலெழுந்த பெருமை பற்றிய  மருட்கைச்சுவை நிலைக்களமாயினமை
அறிக.
 

யாமும் காதலெம் அவற்குஎனச் சாஅய்ச் 

சிறுபுறங் சுவையினெ னாக, உறுபெயல் 

தண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்செய் 

மண்போல் நெகிழ்ந்தவற் கலுழ்தே 

நெஞ்சறை போகிய அறிவி னேற்கே. 

(அகம்-26)
 

என்பது, ஊடிச் சென்ற நெஞ்சு கூடலை நோக்கி நெகிழ்ந்தமை   நோக்கித்
தலைவி    கூறியதாகலின்   இதற்கு   ஆக்கம்   பற்றிய மருட்கைச்சுவை
நிலைக்களமாதலை அறிக.
 

5. அச்சம் :

கானக நாடன் வரூஉம், யானைக்

கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறநெறி

மாரி வானந் தலைஇ நீர்வார்பு

இட்டருங் கண்ண படுகுழி இயவின்

இருளிடை மதிப்புழி நோக்கி அவர்

தளரடி தாங்கிய சென்றது.......

(அகம்-128)
 

இங்ஙனம்  தலைவி உவமங்கூறியதற்கு நிலைக்களம் அப்பொழுது தலைவன்
வரும்வழி பற்றிய ஏதங்கருதிய அச்சச்சுவையாதலை அறிக.
 

6. பெருமிதம்:

நீர்மிகின் சிறையுமில்லைத் தீமிகின்

மன்னுயிர் நிழற்றும் நிழலு மில்லை

வளிமிகின் வலியு மில்லை ஒளிமிக்கு

அவற்றோ ரன்ன சினப்போர் வழுதி

தண்டமிழ்ப் பொதுவெனப் பொறாஅன்

(புறம்-51)
 
இவ்வுவமத்திற்குத்   தண்டமிழ்ப்   பொதுவெனப்  பொறாத வழுதியின்
தறுகண்மையைப் புலவர் கருதியவழி அவருள்ளத்துத் தோன்றிய பெருமிதச்
சுவை நிலைக்களமாதலைத் தெரியலாம்.
 

இகுளை இஃதொன்று கண்டை இஃதொத்தன் 

கோட்டினத் தாயர் மகனன்றே மீட்டொரான் 

போர்புகல் ஏற்றுப் பிணர்எழுத்திற் றத்துபு 

தார்போலத் தழுவியவன்  

(கலி-103)
 

என்பதுமது.   இதன்கண்   தலைவன்    ஏறுதழுவிய  காட்சி தலைவியின்
உள்ளத்திற்  பெருமிதத்தைத்   தோற்றுவித்தலின்   அது   நிலைக்களமாக
இவ்வுவமந் தோன்றியமை அறியலாம்.
 

7. வெகுளி :

............. ............ ............ இந்நிலத்து

ஆற்ற லுடையோர் ஆற்றல் போற்றாதென்

உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்

துஞ்சுபுலி இடறிய சிதடன் போல

உய்ந்தனள் பெயர்தலோ அரிதே .....

(புறம்-73)
 

என்பது,   மடவோன்    எள்ளியமை.   ஆற்றலுடையோரின்  ஆற்றலைப்
போற்றாது உறுப்பறை  செய்ததாகலின்  உறுப்பறை   பற்றித்   தோன்றிய
வெகுளிச்சுவை இவ்வுவமத்திற்கு நிலைக்களமாயினமை கண்டு கொள்க.
 

8. உவகை :பயங்கெழு பலவின் நெல்லிக் குடவரை
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயில் தோன்றி யன்னநின்
ஆய்நலன் உள்ளி வரின் எமக்கு
ஏம மாகும் மலைமுத லாறே
(நற்-192)
தலைவியின்   நலத்தை   எண்ணுங்கால்   தலைவற்கு உவகை பிறத்தலின்
தோன்றிய உவமமாகலின் இதற்கு   உவகைச்சுவை   நிலைக்களமாயினமை
தெளியலாம். பிறவும்   சான்றோர்    செய்யுட்கண்   எண்சுவையும் உவம
நிலைக்களமாக வருவனவற்றை ஓர்ந்து கொள்க.
 

இனி,  இச்சூத்திரம்  நால்வகை உவமத்தோற்றம் பற்றியதொரு விளக்கங்
கூறுவதாகக்   கருதி இளம்பூரணர்   வினை  பயன்  மெய் உரு என்பவை
தொக்கும் விரிந்தும்   இரண்டிரண்டாக வரும்மென்று   உரை   கூறுவார்.
தொக்கு   வருதல் "சுட்டிக்   கூறா   உவமம்"    என்னும்  சூத்திரத்தாற்
பெறப்படுதலானும்  தொகுதலையும் விரிதலையும் இரண்டாக  எண்ணுவதாற்
போந்த   பயன்  யாதுமின்மையானும்   அவர்   கருத்துப்  பொருந்தாமை
தெளிவாகும்.
 

இனிப்,  பேராசிரியர்  இளம்பூரணர்  கருத்தினை முதலுரையாகக் கூறிப்
பின்னர் எட்டெட்டாகக் கூறப்பெற்ற உவமச்சொற்கள் இரண்டு வகைப்பட்டு
வரும் என்பார். அவ்வுரையான்  உவமம்  பற்றிய இலக்கணம் யாதொன்றும்
பெறப்படாமையறிக.
 

‘நாலிரண்   டாகும்   பாலுமா  ருண்டே’  என்பது மெய்ப்பாட்டிற்குரிய
சுவையே என்பது வரும் சூத்திரத்தானும் தெளியப்படும்.