சூ. 198 :

நோயும் இன்பமும் இருவகை நிலையிற்

காமங் கண்ணிய மரபிடை தெரிய

எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய

உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல்

மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்

சொல்லா மரபின வற்றொடு கெழீஇச்

செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்

அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ

இருபெயர் மூன்றும் உரிய வாக

உவம வாயிற் படுத்தலும் உவமம்

ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி

(2)
 

க - து : 

மேற்கூறியவற்றான்  செய்யுட்   சொற்கள்   பொருள்   திரிந்து
இசைக்கும்   இடமும்   இசைக்கும்   முறைமையும்   அவற்றை
இசைப்போரும் பற்றி நிகழும்  ஒருசார் அகப்பொருட் கிளவிகள்
ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :  நோயும்   இன்பமும்.......   தெரிய   என்பது  =  பிரிவும்
புணர்வும்  காரணமாக  உறும்   துன்பமும்  இன்பமும்  ஆகிய இருவகை
நிலைமையுடைய  காம   ஒழுக்கத்தைக்  கருதிய  மரபினது இடம்  நன்கு
விளங்க   என்றவாறு.  இம்மரபு  ஈண்டு  இவ்வாற்றான் அமைந்தது  என
உணருவதற்கு   "மரபு  இடை   தெரிய"  என்றார்.   எட்டன்   பகுதியும்
விளங்க........ நெஞ்சொடு     புணர்த்தும்    என்பது   =  நகை  முதலாய
மெய்ப்பாடு   எட்டனது  பொருட்  கூறுபாடுகளும்   புலப்படத் தமக்குரிய
மெய்,   வாய்  முதலாய   உறுப்புக்களையுடையது   போலவும் உள்ளுதல்,
துய்த்தல்   முதலாய   உணர்வுகளையுடையது   போலவும்   வாய் திறந்து
சொற்களான்   மறுமொழி    கூறுவது   போலவும்   தம்  நெஞ்சத்தொடு
அவற்றைச் சேர்த்துக் கூறுதலும் என்றவாறு.
 

நகை முதலாய  மெய்ப்பாடுகள், எள்ளல், இளமை, உடைமை, புகுமுகம்
புரிதல்   முதலாகப்    புறஞ்சொல்    மாணாக்கிளவி   ஈறாகக்   கூறிய
பொருள்களைப்பற்றித்    தோன்றுவன   வாகலின்  "எட்டன்    பகுதியும்
விளங்க"  என்றார். அருவப்  பொருளாகிய  நெஞ்சினைத்  தம்மைப்போல
வைத்துக் கூறலின் "நெஞ்சொடு புணர்த்தும்" என்றார்.
 

சொல்லா   மரபின   வற்றொடு  ......................  அடக்கியும்  என்பது  =
மக்களின்  பேசும்   இயல்பினை.  மொழிப்படுத்துப்   பேசுதற்கு  இயலாத
விலங்கு,   பறவை,   கடல்,   கானல்    முதலியவற்றொடு     பொருத்தி
அஃறிணையாயவை  செய்தற்கியலாத   இயல்புடைய  வினைகளை  அவை
செய்வனவாக அவற்றிற்கு ஏற்றிக்கூறுதலும் என்றவாறு.
 

அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் என்பது = தாம் தொடர்புறும்
பிறர் பிறர்  எய்திய  துன்பங்களைத் தாம்   உறும் துன்பத்தை ஒத்ததாகக்
கருதி அவரவரைத் தம் நிலைமையொடு   பொருத்திக் கூறலும் என்றவாறு.
அவரவர்  என்றாரேனும் "ஒருபாற்  கிளவி ஏனைப்பாற் கண்ணும்" (சூ. 26)
என்பதனான்    அவையவை   உறுபிணியும்   கொள்ளப்படும்.  அதனான்
அவற்றின்   இயல்பான  நிலைகளையும்  அவை எய்தியனவாகக்   கருதிப்
பேசுதலும் கொள்க.
 

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ  இருபெயர் மூன்றும்....கிளவி  என்பது
= தம்  மன   அறிவினையும்    பொறிகளினிடமாக     நிகழும்   ஐம்புல
அறிவினையும்  தமவாகக் கூறாமல்   அவற்றைத் தம்மின் வேறாக நிறுத்தி
ஒன்று, பல என்னும் இருபால் அஃறிணைப் பொருள்கட்கும் அறம் பொருள்
இன்பம் என்னும்  உறுதிப்பொருள் மூன்றும் உரியவாகக்  கொண்டு அவை
பற்றி   உவமஞ்  செய்து கூறுதற்கு இயையுமிடத்து  உவமவாயிற்  படுத்துக்
கூறுதலும்   கிழவன்   கிழத்தியாகிய  இருவர்க்கும்   உரிய   ஒருவகைப்
பாகுபாட்டுக் கிளவிகளாகும் என்றவாறு.
 

தலைவன்  தலைவிக்குக்  களவியலுள்ளும்  கற்பியலுள்ளும்  கூறப்பட்ட
கிளவிகளைப்  போலாமல்   இவை,  நோயும்  இன்பமுமாகிய   நிலையிற்
காமங்கண்ணிய மரபு பற்றி வருதலின் "உரியபாற்கிளவி" என்றார்.
 

அறம் முதலாகிய மும்முதற் பொருள்கள்  உயர்திணையாகிய மக்கட்கே
உரிய   பொருளாகலான்  அவை  ஆன்ம  உணர்வு  இல்லாத   ஏனைய
அஃறிணைப்  பொருட்கு  இல்லை  எனினும், ஈண்டு நெஞ்சிற்கும் விலங்கு
முதலாயவற்றிற்கும்  உயர்திணைக்குரிய  இயல்புகளை  ஏற்றிக்  கூறுதலான்
அவ்வழி  அம்மூன்றும்  அவற்றிற்கு  உரியவாகக்  கூறப்படும்   என்பதும்
அங்ஙனம் கூறுதலே பொருளியல் மரபு என்பதும் இதனாற் புலப்படும்.
 

உரையாசிரியன்மார்  இச்சூத்திரத்திற்குப் பொருளியல் மரபுக்கு ஒவ்வாத
விளக்கங்களைக் கூறிச் சென்றனர்.
 

பாற்கிளவி  எனினும்  பகுதிக்கிளவி எனினும்  ஒக்கும். இதற்குப்  பக்க
சொல், ஒரு கூற்றுச்சொல் எனப் பொருள் கூறுவர்.  இக்கிளவிகள் வேட்கை
ஒருதலை யுள்ளுதல் (கள-9) என்னும் சூத்திரத்துக் கூறிய "மறத்தல் மயக்கம்
சாக்காடு" என்னும்   உணர்வுகள் பற்றித் தோன்றுதலின் "அறிவும்  புலனும்
வேறுபட    நிறீஇ"   என்றார்.   இந்நிலை,   காமங்  கண்ணிய  கிழவன்
கிழத்தியர்க்கே அமையும் என்பது விளங்க "இருவர்க்கும்" என்றார்.
 

இனித்  தலைவன் தலைவியர் அறிவும்  புலனும்  வேறுபட்ட நிலையில்
கூறும்    இத்தகு    ‘பாற்கிளவிகள்’   அவர்    மாட்டு   ஆரா  அன்பு
பூண்டொழுகும்  தோழி  மாட்டும்  செவிலி  மாட்டும்  தலைவியது  துன்ப
நிலையை எண்ணிக் கலங்கி அவர்தம் அறிவும் புலனும்  வேறுபடுமிடத்தும்
நிகழுமெனப்  பின்னர்க் கூறுவார்  ஆசிரியர். அவ்வழி ஈண்டுத் தலைவன்
தலைவியர்க்கு    ஓதிய    நெஞ்சொடு   புணர்த்தல்,   தொழிற்படுத்தல்,
உறுபிணிதம்போற்  சேர்த்தல்   ஆகியவற்றுள்  ஏற்பன   பொருந்திவரும்
எனவும் அறிக.
 

எ-டு :

உண்ணாமையின் ............ என்னும் அகப்பாட்டினுள்

(123)
 

"இறவொடு வந்து ............ பொருட்கே"
 

என   நெஞ்சினை   உறுப்புடையது   போலக்   கழறி,   ஓதத்தையும்
நெஞ்சினையும்  உயர்திணையாக்கி   உவமவாயிற்   படுத்தவாறு    கண்டு
கொள்க.
 

      

"கொல்வினைப் பொலிந்த" என்னும் அகப்பாட்டினுள்

(9)

கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக்

கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்

பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்

தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ

நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல்

அந்தீங் கிளவிக் குறுமகள்

மென்றோள் பெறல் நசைஇச் சென்றஎன் நெஞ்சே"
 

என்பது      தலைவன்    தன்னெஞ்சினை     உறுப்புடையது    போல்
உவகைப்பற்றிக் கூறியது.
 

  

‘அன்றவண் ஒழிந்தன்றும்’என்னும் அகப்பாட்டினுள்

(19)

"வருந்தினை வாழிஎன் நெஞ்சே, பருந்திருந்து

உயாவிளி பயிற்றும் யாஉயர் நனந்தலை

உருள்துடி மகுளியின் பொருள்தெரிந் திசைக்கும்

கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம்

எம்மொடு இறத்தலும் செல்லாய்ப் பின்னின்று

ஒழியச் சூழ்ந்தனை"
 

என்பது   தலைவன்   தன்னெஞ்சினை   அறிவுடையது  போல்  அழுகை
பற்றிக் கூறியது.
 

பூவில் வறுந்தலை போலப் புல்லென்று

இனைமதி வாழிய நெஞ்சே

(குறு-19)
 

இஃது உணர்வுடையதுபோல் வெகுளி பற்றிக் கூறியது.
 

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்

செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு

அம்மா அரிவையும் வருமோ

எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே

(குறு-63)
 

என்பது மறுத்துரைப்பதுபோல் நெஞ்சினை இளிவரல்பற்றிக் கூறியது.
 

"வெறிகொண்ட புள்ளினம் வதிசேரும் பொழுதினான்

செறிவளை நெகிழ்த்தான்கண் சென்றாய்மற் றவனைநீ

அறியவும் பெற்றாயோ அறியாயோ மடநெஞ்சே"

(கலி-123)
 

என்பது   தலைவி   நெஞ்சினை  உணர்வுடையது   போல்  நகை பற்றிக்
கூறியது.
 

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீயெமக் காகா தது

(குறள்-1291)
 

இது இளிவரல் பற்றி மறுத்துக்கூறியது.
 

இவை  துன்பமும் இன்பமும் நிலைக்களமாகக் காமங்கண்ணிய மரபிடை
தெரிய வந்தன.
 

"கானலுங் கழறாது கழியும் கூறாது

தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது

ஒருநீ யல்லது பிறிதுயா துமிலனே

இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்

கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்

தண்டா தூதிய வண்டினம் களிசிறந்து

பறைஇய தளருந் துறைவனை நீயே

சொல்லல் வேண்டுமார் அலவ"

(அக-170)
 

என்பது  சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகை பற்றிக் கூறியது. இது தலைவி கூற்று.
 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

(குறு-2)
 

என்பது  சொல்லா  மரபினது சொல்லுவதாக  உவகை பற்றிக் கூறியது. இது
தலைவன் கூற்று.
 

"போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல்

ஆரஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ"

(கலி-120)
 

என்பது  செய்கையில்லாத  மாலைப்   பொழுதினைத்  தொழிற்படுத்தடக்கி
உவமவாயிற் படுத்துக்கூறியது. இது தலைவி கூற்று.
 

  

"தொல்லூழி தடுமாறி" என்னும் நெய்தற்கலியில்

(129)

"பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்

தூவறத் துறந்தனன் துறைவன்என் றவன்றிறம்

நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்

காதல்செய் தகன்றாரை உடையையோ நீ"
 

என்பது  தம்பிணிக்கு  வருந்தினவாகச்  சேர்த்தி   உவமவாயிற்  படுத்துக்
கூறியது.
 

"சென்றது கொல் போந்தது கொல் ...... நெஞ்சு"
 

என்பது கைக்கிளைக்கண்  நெஞ்சினை   உறுப்புடையது  போல்  அவலம்
பற்றிக் கூறியது.
 

ஓங்கெழிற் கொம்பர் நடுவிதெனப் புல்லும்

.... ...... ...... ...... ....... ..... ....... ....... ...... ......

ஆள்வலி மிக்கான் அஃதறி கல்லான்

(நச்-மேற்)
 

என்பது  பெருந்திணைக்கண்  அஃறிணையை உயர்திணையாக உவமவாயிற்
படுத்து அவலம் பற்றிக் கூறியது. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க.
 

தலைவன் தலைவியர் தாம்  மேவிய காம ஒழுக்கத்தின்கண்  துன்பமும்
இன்பமும் மிக்கவிடத்துச் சிந்தித்துணரும் மன அறிவும் ஐம்புலனாற் பெறும்
பொருளறிவும் தம் உணர்வொடு ஒன்றி நில்லாமல் அறிவு தாழ்வுற உணர்வு
மேலுறுதலான்  நெஞ்சத்தொடும்  அஃறிணைப்  பொருள்களொடும்  கூற்று
நிகழ்த்துவர்  என்பதும், அஃறிணைப்  பொருள்கள்  பேசுதற்கு  உரியவை
போலவும்  மக்களைப் போலச்  செயலாற்றுதற்குரியவை  போலவும் அவை
அறம் பொருள்  இன்பமாகிய மும்முதற்  பொருளையும்  கருதி  ஒழுகுதல்
போலவும்  கொண்டு   கூற்று  நிகழ்த்துவர்   என்பதும்  இச்சூத்திரத்தின்
விளக்கமாகும். இஃது பகுத்தறிவிற்கு ஒவ்வுமோ? எனின் இலக்கியக்கலைக்கு
உயிராகச் சிறந்து  வருதலின் அறிவியலுக்கு  ஏற்புடையதாதலை அறியலாம்.
அறிவினது  முடிவின்கண்  தோன்றுவதே  உணர்வென்பதையும் உணர்வின்
வெளிப்பாடே  இன்பமும் துன்பமுமாகிய நிகழ்ச்சிகள்  என்பதையும் ஓர்ந்து
கொள்க.