சூ. 252 : | நகையே அழுகை இளிவரல் மருட்கை |
| அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று |
| அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப |
(3) |
க - து : | தமிழியலார் கூறும் செய்யுளுறுப்பாகிய மெய்ப்பாடுகளின் பெயரும் தொகையும் கூறுகின்றது. |
பொருள் : மெய்ப்பாடாவன நகையும், அழுகையும், இளிவரலும், மருட்கையும், அச்சமும், பெருமிதமும், வெகுளியும், உவகையும் என்று சொல்லப்பட்ட அப்பகுதி எட்டே எனக்கூறுவர் புலவர். |
நகையே என்பது எண்ணேகாரம். எட்டே என்பது தேற்றேகாரம். அப்பால் என்றது நகை முதலாகப் பகுத்தவற்றை. இக்குறியீடுகளும் தொகையும் தொல்லோர் வகுத்தவை என்பது தோன்ற "என்ப" என்றார். |
1. நகையாவது முறுவலித்தல். அஃது புன்முறுவலும் நன்முறுவலும் என இருதிறப்படும். நகையெனினும் மூரல் எனினும் ஒக்கும். (வன்முறுவல் வெகுளிபற்றிப் பிறத்தலின் அதனை வேறாகக் கொள்க) |
2. அழுகையாவது அவலித்தல். அது கண்கலுழ்தலும், துயர் உறுதலுமாக நிகழும். தனக்குற்ற இடர் காரணமாக வரும் அழுகை நொந்தழுதலாம். பிறர்க்குற்ற இடர் காரணமாக வரும் அழுகை இரங்கியழுதலாம். |
அழுகை, அவலம், இரக்கம், துயரம் என்பவை ஈண்டு ஒத்த பொருளில் வரும். பெருமிதம் பற்றி வரும் உவகைக்கலுழ்ச்சி அழுகையாகாதென்றறிக. |
3. இளிவரலாவது இழிவுறுதல். இகழ்வுறுதல் எனினும் ஒக்கும். அது கொள்ளுதற் கொவ்வாக் குறையும் மனக்குறையும் பற்றிவரும் துன்பமாம். |
4. மருட்கையாவது வியப்புறுதல். அஃது ஆராய்ச்சிமுட்டுப் பாடுற்றவழி எய்தும் அறிவு இயங்காநிலையாகும். |
5. அச்சமாவது பருவரலிடும்பை நேருங்கொல் என எண்ணி உள்ளம் மெலிதலாம். பயம் என்பது உலகவழக்கு. |
6. பெருமிதமாவது வீறு. அஃது அறிவும் ஆற்றலும் மிக்க விடத் தெய்தும் மனநிலை (பெரும்மிதம்-பெருமிதம், மிதம்-அளவு) வீரம் என்பர் உரையாசிரியன்மார். பெருமிதத்திற்குக் காரணமான பொருள்களுள் தறுகண் என்பது மட்டுமே வீரம் எனற்குத் தகுமாதலின் வீரம் வேறு; வீறு வேறு என அறிக. |
7. வெகுளியாவது சினத்தல். சீற்றம் எனினும் ஒக்கும். இச்சொல், வேகும்-உள்-இ. என்னும் உரியடிகளாற் பிறந்த பெயராகும். |
8. உவகையாவது உவத்தல். அஃதாவது இனிமையொடு திளைக்கும் உள்ளக்களிப்பு. மகிழ்வெனினும் ஒக்கும். |
இனி, இவற்றை இங்ஙனம் நிரல்படவைத்தமைக்கு ஒருவாறு அமைதி கூறும். |
உணர்தற்கு எளியதும் யாவர்க்கும் ஒப்பதும்பற்றி நகை முதற்கண் வைக்கப்பட்டது. அவ்வாறே அமைந்து நகைக்கு மறுதலையாக வருதலின் அழுகை அதன்பின் வைக்கப்பட்டது. |