சூ. 265 :

பாராட் டெடுத்தல் மடந்தப உரைத்தல்

ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்

கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ

எடுத்த நான்கே நான்கென மொழிப

(16)
 

க - து : 

பாராட்டெடுத்தல் முதலியவை நான்காம் கூறு என்கின்றது.
 

பொருள் :பாராட்டெடுத்தல்,  மடந்தப  உரைத்தல்,  ஈரமில்  கூற்றம்
ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்பது உட்படக்  கூட்டிக் கிளந்து
சொல்லிய நான்கு பொருளும் நான்காம் கூறு என மொழிவர் ஆசிரியர்.
 

இவை   களவியலுள்  கூறிய  தெளிவகப்படுத்தல்  (கள-10)  சொல்லிய
நுகர்ச்சி   வல்லே   பெற்றுழித்   தீராத்   தேற்றம்   (கள-11)   நொந்து
தெளிவொழிப்பினும், அச்சம் நீடினும், தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக்
கூறலும்,  களவறிவுறினும்  எனவரும்  கிளவி  முதலியவற்றிற்கு  உரியவாக
நிகழும் மெய்ப்பாடுகட்குரிய பொருள்களாகும்  என்பது  தோன்ற  "எடுத்த
நான்கு" என்றார்.
 

1. பாராட்டெடுத்தலாவது :புணர்ச்சி   நிகழ்ந்த   பின்னர்த்   தனது
ஆராக் காதலுணர்வு  மாறாமை விளங்கத் தலைவியின் நல முதலியவற்றைப்
பரக்கப் பேசுதல்.
 

தலைவியின்   பண்பு   முதலியவற்றைப்   புனைந்து   தனது   மீளா
வேட்கையைத் தலைவன் விதந்து கூறலின் பாராட்டல்  என்னாது பாராட்டு
எடுத்தல் என்றார். இஃது இருவர்க்கும் ஒக்குமாயினும்
 

காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்

நாணு மடனும் பெண்மைய வாகலின்

குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை

நெறிப்பட வாரா அவள்வயி னான

(கள-18)
 

என்பது மரபு பற்றிய விதியாகலின் தலைவி பாராட்டுதல் அவள் உள்ளத்தே
நிகழுமென அறிக. தலைவன் பாராட்டுதல் வெளிப்பட நிகழும் என்க.
 

எ - டு :

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவு முளவோ நீஅறியும் பூவே

(குறு-2)
 

என்பது தலைவன் தலைவியைப் பாராட்டியது.
 

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே

(குறு-3)
 

என்பது  தலைவி  பின்னொரு  காலத்துத்  தோழியிடத்துத்  தலைவனைப்
பாராட்டிய  பாராட்டு.  இந்நுட்பந் தோன்றப்  பாராட்டுரைத்தல்  என்னாது
பாராட்டு எடுத்தல்  என்றார் என அறிக. இஃது  உவகைக்குப்  பொருளாக
அமையும்.
 

2. மடந்தப உரைத்தலாவது :பெதும்பைப்  பருவத்து  முற்றி  நின்ற
மடப்பம்   சிறிது   நீங்கத்   தலைவி   அளவோடு  பேசுதலாம்.   மடம்
பெண்மைக்குரிய குணனாகலான் இது தலைவற்குரித்தன்மை புலப்படும். இது
பெரும்பான்மையும் தலைவிக்குத் தோழியை நோக்கியதாக நிகழும்.
 

எ - டு :

அன்னாய் வாழி வேண்டன்னை என்னை

தானும் மலைந்தான் எமக்குந்தழை யாயின

பொன்வீ மணியரும் பினவே

என்ன மரம்கொல் அவர்சா ரலவ்வே

(ஐங்-20)
 

இதன்கண் தலைவி செவிலிக்குத் தன் களவொழுக்கத்தைப் புலப்படுத்துமாறு
தோழியிடம் கூறும் மடனழிவு கண்டு கொள்க.
 

எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்

தனிக்குரு குறங்குந் துறைவற்கு

இனிப்பசந் தன்றென் மாமைக் கவினே

(ஐங்-144)
 

இதன்கண் தலைவற்கு வரைவு கடாதல் முகத்தான் தலைவி  கூறி மடனழிய
நின்றவாறு கண்டு கொள்க. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

3. ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலாவது :  நாற்றமும்   தோற்றமும்
ஒழுக்கமும் உண்டியும் மாறுபட்டமையானும் அறிமடம் நீங்கிய உரையானும்
தலைவியைச் செவிலியும் நற்றாயும்  ஐயுற்றவழிக்  கூறும்  கடுஞ்சொற்களை
மறாது  ஏற்றுப் புறத்தார்க்கு  இது  புலனாங்கொல்  எனக்  கருதித்தலைவி
நாணுதல்.
 

இனி, நசையிலாப்  பழிச்சொற்களை ஏற்றிக் கூறும்  அம்பல்  மகளிரின்
அலருக்கு நாணுதல் எனப்பொருள் கோடலுமாம். இப் பொருட்கு "ஏற்றலர்"
என்பது வினைத்தொகை மொழியாகும்.
 

எ - டு :

யானே ஈண்டைய னேஎன் னலனே

ஆனா நோயொடு கான லஃதே

துறைவன் தம்மூ ரானே

மறைய லராகி மன்றத் தஃதே.

(குறு-97)
 

எனவும்
 

கௌவை தூற்றும் வெவ்வாய்ச் சேரி

அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச்

சென்றனர் ஆயினும் செய்வினை யவர்க்கே

வாய்க்கதில் வாழி தோழி .....

(அக-347)
 

எனவும் வரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

4. கொடுப்பவை கோடலாவது :   தலைவனாற்    கொடுக்கப்பெறும்
தழையும்   கண்ணியும்   தாரும்    மாலையும்   ஆகிய   கையுறைகளை
ஏற்றுக்கோடல்.
 

எ - டு :

பெரும்புலர் விடியலின் விரும்பப் போத்தந்து

தழையுந் தாரும் தந்தனள் இவன்என

இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்

தைத்திங்கள் தண்கயம் படியும்

பெருந்தோட் குறுமகள் .....

(நற்-80)
 

எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.
 

"எடுத்த" என்றதனான் கொடுப்பவை கோடற்குத்  தடுமாறலும் இதன்கண்
அடங்குமெனக்  கொள்க.   அவ்வழி  அஃது  அச்சத்திற்குப்  பொருளாக
அமையும்.
 

எ - டு :

....... ....... குன்ற நாடன்

உடுக்குந் தழைதந் தனனே யாமஃது

உடுப்பின் யாயஞ் சுதுமே, கெடுப்பின்

கேளுடைக் கேடஞ் சுதுமே, ஆயிடை

வாடல கொல்லோ தாமே ...... .......

(நற்-359)
 
எனவரும்.