சூ. 174 :

பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத்

தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும்

இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும்

இறந்த துணைய கிழவோன் ஆங்கண்

கலங்கலும் உரியன் என்மனார் புலவர்

(31)
 

க - து :

தலைமகற்குரியதோ ரியல்பு கூறுகின்றது.
 

பொருள் :  தன்   குலமரபு   காரணமாகக்  கரணத்தொடு   மணந்து
கொள்ளப்பெற்ற  பின்முறை  மனைவியை  அம்மரபானே  தான்  முன்னர்
வரைந்து  கொண்ட  தொன்முறை மனைவி மங்கலப்  பொருள்களை ஏந்தி
வந்து  எதிர்  ஏற்றுக்கோடல் நிகழுமாயினும்,  இனிய   கலன்களையணிந்த
தன்புதல்வனை வாயிலாகக் கொண்டு அகமனைக்கண் புகுவானாயினும் அந்
நிலைமக்கண்  தனது குலமரபினையும் காமக்கிழத்தியரைப் பேணவேண்டிய
கடப்பாட்டினையும்   எண்ணிச்    செயலற்றவன்   போலத்    தலைவன்
மனங்கலங்குதற்கும் உரியன் எனக்கூறுவர் புலவர்.
 

கலக்கமாவது  :  இத்தகைய  கற்பும்   பொறையும்   அன்புமுடையாள்
இன்புறுதற்கியலாமல்  முதிர்ந்தமை  எண்ணியும், இத்தகைய  நன்கலனாகிய
புதல்வனை   ஈன்றளித்தாளைப்   பிரியாது   உடனுறைதற்கு  இடையூறாக
அமைந்துள்ள  கடமைகளை எண்ணியும் கலங்குதல். அவற்றை விலக்கற்குத்
தன்னால்   இயலாமை  நோக்கிச்  செயலறவுறுதலின்  "இறந்த   துணைய"
என்றார்.
 

அவை  வழிவழி   வரும்  குலமரபும், கடமையும்  பற்றி  அமைதலான்
கலங்காமைக்கும் உரியனாதலின் உம்மை எதிர்மறை.
 

மக்களின்  உளவியல்பும்  உலகியல் வழக்கும்  நோக்கி முந்து நூலோர்
அமைத்த  இன்னோரன்ன  இலக்கணச்  சூத்திரங்கட்கு  ஆரியரது  மிருதி
நூல்களையும்  பிற ஏதுக்களையும்  கருதி உரையாசிரியன்மார் உரை  கூறிச்
சென்றனர். இத்தகைய மரபுகளை மாணாக்கர் ஓர்ந்துணர்வாராக.