சூ. 299 :

பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி

முன்ன மரபிற் கூறுங் காலைத்

துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே

(23)
 

க - து :

இஃது  உவமப்போலி  கூறும்  முறையையும் அதனை உணரும்
முறையையும் கூறுகின்றது.
 

பொருள் :   உவமத்தை   அதனான்   விளக்கப்படும்   பொருளொடு அமைத்து  வேறுபடக்   கூறாமல்  உவமமாகப்  பிறப்பிக்கும் பொருளொடு
ஒருங்கமையக் கருதிக் குறிப்பாற் பொருள் விளக்கும் இலக்கண நெறியானே
உவமங்    கூறுமிடத்துத்   துணியும்    உணர்வுடையோர்    கொள்ளின்
அத்துணிவின்கண் உவமப் போலியானது உள்ளுறைப் பொருள் உணருமாறு
வரும்.
 

‘படாது’  என்பது  படுத்தாது  எனப் பிறவினைப் பொருட்டாய் நின்றது.
‘படாது’  என்பதற்கும்  ‘கூறுங்  காலை’  என்பதற்கும் செயப்படுப்பொருள்
வருவிக்கப்பட்டன. ‘வரும்’ என்பதற்கு   வினைமுதல்   வருவிக்கப்பட்டது.
‘துணிவு’    என்பது   எண்ணித்   துணிக கருமம் என்புழிப் போல மேற்
கொள்ளுதலை உணர்த்தி நின்றது.
 

அகத்திணையியலுள் "உள்ளுறுத் திதனொடு ஒத்துப் பொருள் முடிகென
உள்ளுறுத்   திறுவதை    உள்ளுறை   யுவமம்"  என அதன் இலக்கணம்
கூறப்பட்டமையின்  அதனைச்  சுட்டி ஈண்டுப் ‘பிறிதொடு படாது’ என்றும்
"உள்ளுறை தெய்வம்  ஒழிந்ததை நிலனெனக்  கொள்ளும்  என்ப குறியறிந்
தோரே’’  (அகத்-50)  என்றதனான்   அக்  கருப்பொருள்களைச்  சுட்டிப்
"பிறப்பொடு  நோக்கி" என்றும்  இஃது  உவமம்  இதனான்  தோற்றுவித்து
விளக்கப்   பெறும்   பொருள்  இதுவென்பது   கூறுவோரது குறிப்பினாற்
பெறப்படுதலானும்       அக்குறிப்பு      மரபினைத்   தழுவி    நிற்றல்
வேண்டுமாகலானும்  "முன்ன    மரபிற் கூறுங்    காலை"  என்றும் இஃது
உள்ளுறை;    இஃது   இறைச்சி    என்றாங்கு    உய்த்துணர்வார்க்கன்றி
உள்ளுறையானது செவ்விதின் விளங்காமையான் "துணிவினோர் கொளினே’’
என்றும் கூறினார்.
 

எ - டு :

கரும்பு நடுபாத்தியிற்............. சிதைப்பதுவே (ஐங்-65)

இதற்கு விளக்கம் மேற்கூறப்பட்டது
 

இச்சூத்திரத்திற்குப்    பேராசிரியரின்     உரையை    நோக்குமிடத்து
அவரும் "முன்ன மரபின்" என்றே  பாடங் கொண்டமை புலனாகும். இதற்கு
இளம்பூரணர்   கூறும்   உரையும் எடுத்துக்காட்டுக்களும் "வேறுபட  வந்த
உவமத் தோற்றம்" என்னும் சூத்திரத்துள் அடங்கும்.