சூ. 267 :

புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்

கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு

புலம்பிய நான்கே ஆறென மொழிப

(18)
 

க - து :

புறஞ்செயச் சிதைதல் முதலியவை ஆறாங்கூறு என்கின்றது.
 

பொருள் :புறஞ்செயச்  சிதைதல்,   புலம்பித்   தோன்றல்,   கலங்கி
மொழிதல்,  கையறவு   உரைத்தல்   எனப்   புலப்படுத்தப்பட்ட   நான்கு
பொருளும் ஆறாங் கூறென விளம்புவர் ஆசிரியர்.
 

இவை  களவியலுட்  கூறிய  நோக்குவவெல்லாம்  அவையே   போறல்
மறத்தல்,  மயக்கம்  (கள-9)  காட்சி   ஆசையிற்   களம்புக்குக்   கலங்கி
வேட்கையில்    மயங்கிக்   கையறு   பொழுதினும்,   (கள-17)   நொந்து
தெளிவொழிப்பினும், தமர்தற்காத்த காரண மருங்கினும், பொழுதும்  ஆறும்
புரைவதன்மையின்   அழிவுதலை   வந்த   சிந்தைக்  கண்ணும்,  (கள-21)
எனவரும்   கிளவி    முதலாயவற்றிற்குரியவாக   நிகழும்   மெய்பாட்டுப்
பொருள்கள்  என்பது  விளங்கப்  புலம்பிய  நான்கே  என்றார்.  புலம்பிய
என்றது புலஞ்செய்த என்றவாறாம். சொல்லிய எனினும் ஒக்கும். புலம்பல் -
சொல்லுதல், அறிவித்தல்.
 

1. புறஞ்செயச் சிதைதலாவது:  செவிலியும்  ஆயத்தாரும்   செய்யும்
ஒப்பனைகள் தலைவன் கண்டு  பயனுறாது  கழிதலைக்  கருதி  அவர்தாம்
ஒப்பனை செய்யும்வழி உள்ளம் சிதைந்து வருந்துதல். இஃது  அழுகைக்குப்
பொருளாக வரும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க.
 

2. புலம்பித் தோன்றலாவது:   தலைவியின்   நெஞ்சம்    தலைவன்
வழிச்சென்று இணைந்து நிற்றலான் பண்டுபோலக்  கலந்து  விளையாடாமல்
ஆயத்தாரிடையே இருந்தும் தான்தனியள் போலக் காணப்படுதல்.
 

எ - டு :

இரும்பனந் தீம்பிழி உண்போர் மகிழும்

ஆர்கலி யாணர்த் தாயினும், தேர்கெழு

மெல்லம் புலம்பன் பிரியின் புல்லெனப்

புலம்பாகின்றே தோழி

(நற்-38)
 

எனவரும்.
 

இதுவும் அழுகைக்குப்  பொருளாக  அமையும். இளிவரல்  என்பதற்கும்
ஏற்கும்.
 

3. கலங்கி மொழிதலாவது :  தலைவன்  வரைபொருள்  முதலியவை
பற்றிப்   பிரிந்தமையான்   உற்ற   நிறையழிதுயரம்   காரணமாக   மறை
புலப்படாமாறு உளங்கலங்கிப் பேசுதல்.
 

எ - டு :

நக்கு நலனும் இழந்தாள் இவளென்னும்

தக்கவிர் போலும், இழந்திலேன் மன்னோ

மிக்கவென் நாணும் நலனுமென் உள்ளமும்

அக்கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன்று

உக்காண், இஃதோர் உம்புயிர்க் கூற்றாகச்

செக்கரம் புள்ளித் திகிரி அலவனொடியான்

தக்கது பன்மாண் நினைந்து

(கலி-146)
 

எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

4. கையறவுரைத்தலாவது :  தனிமையுறுத்தும்    தாங்காத்   துயரான்
தடுமாறும் நெஞ்சினளாய தலைவி தனது அச்சமும் நாணும் மடனும் இகந்து
தானுற்ற அவலத்தைச் சுற்றமறியப் பேசுதல்.
 

எ - டு :

நினையுமென் உள்ளம்போல் நெடுங்கழி மலர்கூம்ப

இனையுமென் நெஞ்சம்போல் இனங்காப்பார் குழல்தோன்ற

சாயஎன் கிளவிபோல் செவ்வழியாழ் இசைநிற்பப்

போயவென் ஒளியேபோல் ஒருநிலையே பகல்மாயக்

காலன் போல்வந்த கலக்கத் தோடென்றலை

மாலையும் வந்தின்றினி

(கலி-143)
 

என வரும்.
 

இதுவும் இளிவரலுக்குப்  பொருளாக  அமையும்.  கலங்கி  மொழிதலும்
கையறவுரைத்தலும்    அகனைந்திணைக்கண்    விரவும்   பெருந்திணைப்
பகுதிகளாகும்.