சூ. 152 : | பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த |
| தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும் |
| அற்றமழி வுரைப்பினும் அற்றம் இல்லாக் |
| கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினும் |
| சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் |
| அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை |
| அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் |
| பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி |
| இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் |
| வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும் |
| புறம்படு விளையாட்டுப் புல்லிய நுகர்ச்சியும் |
| சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் |
| மாணலம் தாவென வகுத்தற் கண்ணும் |
| பேணா ஒழுக்கம் நாணிய பொழுதினும் |
| சூள்வயின் திறத்தால் சோர்வுகண் டழியினும் |
| பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து |
| பெறுதகை யில்லாப் பிழைப்பினும், அவ்வழி |
| உறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய |
| கிழவோள் பால்நின்று கெடுத்தற் கண்ணும் |
| உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின் |
| உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால்நின்று |
| தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் |
| அருமைக் காலத்துப் பெருமை காட்டிய |
| எளிமைக் காலத்து இரக்கத் தானும் |
| பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் |
| பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் |
| நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் |
| காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் |
| பிரியுங் காலத்து எதிர்நின்று சாற்றிய |
| மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் |
| வகைபட வந்த கிளவி யெல்லாம் |
| தோழிக் குரிய என்மனார் புலவர் |
எ - டு : | அயிரை பரந்த அந்தண் பழனத்து |
| ஏந்தெழில் மலரத் தூம்புடைத் திரள்கால் |
| ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள் |
| இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானீர் |
| தொழுதுகாண் பிறையிற் றோன்றியாம் நுமக்கு |
| அரியம் ஆகிய காலை |
| பெரிய நோன்றனிர் நோகோ யானே |
| (குறு-178) |
எனவரும். |
2. அற்றம் அழிவுரைப்பினும் என்பது = களவுக் காலத்தைப் போலத் தணந்துறையும் வருத்தம் நீங்கினமை கருதிக் கூறுமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை |
| வீஇனிது கமழும் துறைவனை |
| நீஇனிது முயங்குமதி காத லோயே (ஐங்-148) எனவும். |
| எரிமருள் வேங்கை இருந்த தோகை |
| இழையணி மடந்தையிற் றோ ன்றும் நாட |
| இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர் |
| நல்மனை வதுவை அயரஇவள் |
| பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே |
| (ஐங்-294) |
எனவும் வரும். |
3) அற்றம் இல்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினும் என்பது = வரைந்து கொண்டமையான் தலைவியைப் பிரிதல் இல்லாத கிழவோனாதல் வேண்டுமென எண்ணி, வழிபட்டாள். அஃது இனிது முடிந்தமையின் அத் தெய்வத்திற்கு இயற்றும் கடப்பாட்டின் கண்ணும் என்றவாறு. |
அஃதாவது தலைவியும் தலைவனும் வரைந்து கொண்டு பிரிவின்றி ஒருங்குறைதல் வேண்டிக் களவுக் காலத்துப் பரவி நின்ற தெய்வம் அதனை முடித்தருளியமையின் அத்தெய்வத்திற்குப் புரியும் கடப்பாட்டின்கண் தோழி கூற்று நிகழ்த்தும் என்றவாறு. |
எ - டு : | நெஞ்சொடு மொழிகருத்து அஞ்சுவர நோக்கும் |
| தாயவள் தெறுவது தீர்க எமக்கெனச் |
| சிறந்த தெய்வத்து மறையுறை குன்றம் |
| மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே |
| பெற்றனம் யாமே மற்றதன் பயனே (நச்-மேற்)
|
எனவரும். |
நச்சினார்க்கினியர் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக் கூறும் என்பார். அங்ஙனம் தோழி தலைமை செய்தொழுகுதல் கற்பின்கண் மரபன்மையின் ஒவ்வுமாறில்லை. அதனான் கிழவோட்சுட்டிய என்னும் பாடம் சிறவாதென்க. |
4) சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் என்பது = கரணத்தின் அமைந்த சீர்த்தியினையுடைய இல்லறக் கிழமையைத் தலைவன் தலைவியிடத்தே கொடுத்தவழித் தானும் அவளொடு உடன் நிகழ்த்தாமல் தலைவன் தன் கடமையை மறந்தொழுகுமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்றுற |
| மையல் நெஞ்சிற்கு எவ்வந் தீர |
| நினக்கு மருந்தாகிய யான்இனி |
| இவட்கு மருந்தன்மை நோமென் நெஞ்சே |
| (ஐங்-59) |
இது மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயவழித் தோழி கூறியது. |
5) அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் என்பது = அறநெறிக்கண் அடங்காததாகிய புறத்தொழுக்கத்தை மேற்கொண்ட தலைவனிடத்து உள்ளம் வேறுபட்டு வருந்திய தலைவியைப் பல்வேறு கடமைகளையுடைய ஆடவர்க்கு அவ்வொழுக்கமும் தவிர்த்தற்கியலாத தொன்றாம். அது குல மரபாகியடங்கும் என எடுத்துக்கூறித் தலைவியது மனனழிவை மாற்றுதற் கண்ணும் என்றவாறு. |
அடங்கக் காட்டுதல் என்பதற்குத் தலைவனது குறையைக் காணாது பொறுத்தாற்றி ஒழுகுதல் கற்புடை மகளிர் கடனாம் என எடுத்துக்காட்டி எனினும் அமையும். |
எ - டு : | இதுமற் றெவனோ தோழி துணியிடை |
| இன்னர் என்னும் இன்னாக் கிளவி |
| இருமருப் பெருமை ஈன்றணிக் காரான் |
| உழவன் யாத்த குழவியின் அகலாது |
| பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன். |
| திருமனைப் பலகடம் பூண்ட |
| பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே |
| (குறு-181) |
எனவரும். |
6) பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் என்பது = புறத்தொழுக்கமாகிய பிழையைப் புரிந்து வந்து மனைப்புறத்திருந்த தலைவனை மிகவும் இடித்துரைத்துப் பின்னர்த தலைவியை இன்னுரை கூறி அவனை அன்பிற்குரியனாக ஆக்கிக் கொடுத்தற் கண்ணும் என்றவாறு. |
எ - டு : | தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத் |
| தாய்முகம் நோக்கி வளர்ந்திசி னாஅங்கு |
| அதுவே ஐயநின் மார்பே |
| அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே |
| (ஐங்-44) |
இது தோழி தலைவனை இடித்துரைத்தது |
| முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப் |
| புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும் |
| தண்டுறை யூரன் தெளிப்பவும் |
| உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய் |
| (ஐங்-21) |
இது தலைவிக்கு இன்னுரை கூறியது. பிறவும் வந்துழிக் கண்டு கொள்க. |
7) வணங்கிய மொழியான் வணங்கற் கண்ணும் என்பது : பணிந்தொழுகுதலைக் காட்டும் இலக்கணத்தையுடைய சொற்களான் வழிமொழிந்து வணங்குதலைச் செய்யுமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | உண்டுறைப் பொய்கை வராஅல் இனமிரியும் |
| தண்டுறை யூர தகுவகொல் - ஒண்டொடியைப் |
| பாராய் மனைத்துறந் தச்சேரிச் செல்வதனை |
| ஊராண்மை யாக்கிக் கொளல். |
| (ஐந்திணை-எழு-54) |
8) புறம்படு விளையாட்டுப் புல்லிய புகர்ச்சியும் என்பது = பரத்தையரொடு புறத்தே சென்று விளையாடும் விளையாட்டினைத் தலைவன் பொருந்திய பிழையொழுக்கத்தின் கண்ணும் என்றவாறு. |
எ - டு : | காலை யெழுந்து கடுந்தேர்ப் பண்ணி |
| வாலிழை மகளிர் தழீஇய சென்ற |
| மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென |
| மறுவரும் சிறுவன் தாயே |
| தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே |
| (குறு-45) |
இது தலைவியின் நிலை கூறுவாளாய்க் குறிப்பாற்றலைவன் குறையை உணர்த்தியது. பிறவும் சான்றோர் இலக்கியங்களுள் கண்டு கொள்க. புகற்சி எனப்பாடங்கொண்டு அதற்கு மகிழ்ந்தெனப் பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர். தலைவனது புறத்தொழுக்கினைத் தோழி மகிழ்ந்து கூறுதல் புலனெறி வழக்காகாமையறிக. |
9) சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் என்பது = இருவர்க்கும் சிறந்தோனாகிய புதல்வனைக் கருதாமல் (தலைவி புலந்த காரணத்தான்தலைவன் தனிமையுறுதற்கண்ணும் என்றவாறு. எ-டு : வந்துழிக்கண்டுகொள்க. |
10) மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் என்பது = தலைவியின்பால் நீ கொண்ட மாட்சிமையுடைய நலத்தினை அவட்கு மீளத்தந்து செல்வாயாக எனத் தலைவனை வேறுபடுத்துறைத்தற்கண்ணும் என்றவாறு. |
எ - டு : | யாரை எலுவ? யாரே நீயெமக்கு |
| யாரையு மல்லை நொதும லாளனை |
| அனைத்தாற் கொண்கநம் மிடையே நினைப்பின் |
| கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன் |
| வேந்தடு மயக்கத்து முரசதிர்ந் தன்ன |
| ஓங்கற் புணரி பாய்ந்தாடு மகளிர் |
| அணிந்திடு பல்பூ மரீஇ ஆர்த்த |
| ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக் |
| கடல்கெழு மாந்தை யன்னஎம் |
| வேட்டனை யல்லையால் நலந்தந்து சென்மே |
| (நற்-395) |
எனவரும். |
11) பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் என்பது = தலைவன் தலைவியைப் பேணாது ஒழுகும் ஒழுக்கத்தைத் தலைவன் மாட்டு நாணிக் கூறும் பொருண்மையிடத்தும் என்றவாறு. |
எ - டு : | யாயா கியளே மாஅ யோளே |
| மடைமாண் செப்பில் தமிய வைகிய |
| பெய்யாப் பூவின் மெய்சா யினளே |
| பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் |
| இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும் |
| கயம்மூழ்கும் மகளிர் கண்ணின் மானும் |
| தண்ணந் துறைவன் கொடுமை |
| நம்முன் நாணிக் கரப்பா டும்மே |
| (குறு-9) |
இது தலைமகள் நிலை கூறுவாளாய்த் தன்கருத்தைப் புலப்படுத்தியது. |
12) சூள்வயின் திறத்தாற் சோர்வுகண் டழியினும் என்பது = தலைவன் கூறும் சூளுரையின் திறத்தான் அதனைப் பேணாது ஒழுகும் மறவி கண்டு என்படுமோ எனத் தலைவி வருந்துமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | பகல்கொள் விளக்கொடு இராநா ளறியா |
| வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்னஇவள் |
| நலம்பெறு சுடர்நுதல் தேம்ப |
| எவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே |
| (ஐங்-56) |
13) பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினும் என்பது = சால்புடையோரது ஒழுக்கம் பெருமைக்கு உரியதாகும் என மரபுகூறி அத்தகு சால்பானே தலைவியைப் பெறும் தகவின்றித் தலைவன் பிழைத்தொழுகுமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | வெள்ளி விழுத்தொடி மென்கரும் புலக்கை |
| வள்ளி நுண்ணிடை வயின்வயின் நுடங்க |
| மீன்சினை யன்ன வெண்மணல் குவைஇ |
| காஞ்சி நிழல் தமர்வளம் பாடி |
| ஊர்க்குறு மகளிர் குறுவழி, விறந்த |
| வராஅல் அருந்திய சிறுசிரல் மருதின் |
| தாழ்சினை யுறங்கும் தண்டுறை யூர! |
| விழையா உள்ளம் விழையு மாயினும் |
| என்றும், கேட்டவை தோட்டியாக மீட்டுஆங்கு |
| அறனும் பொருளும் வழாமை நாடி |
| தற்றக வுடைமை நோக்கி மற்றதன் |
| பின்னா கும்மே முன்னியது முடித்தல் |
| அனைய பெரியோர் ஒழுக்கம், அதனால் |
| அரிய பெரியோர்த் தெரியுங் காலை |
| நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன |
| பொய்யோடு மிடைந்தவை தோன்றின் |
| மெய்யாண் டுளதோஇவ் வுலகத் தானே. |
| (அக-286) |
14) அவ்வழி உறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய கிழவோள் பால் நின்று கெடுத்தற் கண்ணும் என்பது = மேற்சொல்லியவாறு தலைவன் பிழைத்தொழுகியவழி அவனை அடையும் தகைமையில்லாத புலவியின்கண் மூழ்கி வருந்திய தலைவியின்பால் அணுகி நின்று அவள் ஊடலை நீக்குமிடத்தும் என்றவாறு. |
எ-டு : | ‘ஒரூஉநீஎங்கூந்தல்’ என்னும் மருதக்கலியுள் |
| (87) |
புலவியால் தலைவனை வெகுண்டுரைத்த தலைவியை நோக்கி |
| மான்நோக்கி! நீஅழ நீத்தவன் ஆனாது |
| நாணிலன் ஆயின் நலிதந்து அவன்வயின் |
| ஊடுதல் என்னோ வினி" |
என உணர்த்தியவாறு காண்க. |
| உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது |
| மிக்கற்றான் நீள விடல் |
| (குறள்-1302) |
என அறிவுறுத்து ஊடல் நீக்கியவாறு கண்டுகொள்க. |
15) உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால்நின்று தான்வெகுண்டாக்கிய தகுதிக் கண்ணும் என்பது = தலைவியுற்ற ஊடல் தீரும் வகையான் உணர்த்தவும் அதற்கு உடன்பட்டு வாராத ஊடலைத் தலைவி கொண்டுள்ள விடத்து உணர்த்தலை வேண்டி நின்ற தலைவன் சார்பாகத் தோழி தலைவியை வெகுண்டுரைத்து அவன் ஊடலைத் தணிவித்துத் தலைவன் விரும்பியாங்கு ஆக்கமுறச் செய்த தகவின்கண்ணும் என்றவாறு. |
உள்ளம் வேறுபட்டார் இருவரை அவர்கொண்ட மாறுபாட்டினை நீக்கி ஒன்றுபடுத்தல் நடுவு நிற்பார் செயலாகலின் அதனைத் தகுதி என்றார். தகுதி = நடுவுநிலைமை. |
எ - டு : | துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை |
| அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு |
| ஈர்ந்தண் எருமைச் சுவல்படுமுது போத்துத் |
| தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப் |
| பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து |
| பரூஉக் கொடிப்பகன்றை சூடி மூதூர்ப் |
| போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன் |
| தேர்தரவந்த தெரியிழை ஞெகிழ்தோள் |
| ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப் |
| பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ |
| புலத்தல் ஓம்புமதி மனைகெழு மடந்தை |
| அதுபுலந் துறைதலை வல்லி யோரே |
| செய்யோள் நீங்கச் சிலபதம் கொழித்துத் |
| தாம்அட் டுண்டு தமிய ராகித் |
| தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப |
| வைகுநர் ஆகுதல் அறிந்தும் |
| அறியா ரம்ம அஃதுடலு மோரே |
| (அக-316) |
எனவரும். |
16) அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத்து இரக்கத் தானும் என்பது = தலைவன் அடைதற்கு அருமையாகிய களவுக்காலத்துத் தம்மாட்டமைந்திருந்த பெருமையை உணர்த்திய தோழி அவன் அடைதற்கு எண்மைத்தாகிய கற்புக்காலத்து நிலைமைக்கு இரங்கிய விடத்தும் என்றவாறு. |
எ - டு : | வேம்பின் பைங்காய் என்தோழி தரினே |
| தேம்பூங் கட்டி என்றெனிர், இனியே |
| பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் |
| தைஇத் திங்கள் தண்ணி யதரினும் |
| வெய்ய உவர்க்கும் என்றனிர். |
| ஐய அற்றால் அன்பின் பாலே |
| (குறு-196) |
எனவரும். |
17) பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் என்பதும் = பாணர் கூத்தர் விறலியர் என்னும் இம்மூவரும் தலைவன் பொருட்டுக் குறையுறும் வினையை எதிர் உறுமிடத்தும் என்றவாறு. |
எதிர்தல் = மாறுபடுதல் - ஏற்றுக்கோடல் என்னும் இரு பொருளும் இடத்திற்கேற்ப வருமாதலின் அவர்தாம் வாயில் வேண்டி வந்த வழி மறுத்தலும், நேர்தலுமாகத் தோழி கூற்று நிகழுமெனக் கொள்க. |
எ - டு : | விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை |
| களிற்றுச் செவியன்ன பாசடை தயங்க |
| உண்டுறை மகளிர் இரியக் குண்டுநீர் |
| வாளை பிறழும் ஊரற்கு நாளை |
| மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே |
| தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி |
| உடன்பட் டோராத் தாயரொடு ஒழிபுடன் |
| சொல்லலை கொல்லோ நீயே வல்லை |
| களிறுபெறு வல்சிப் பாணன் கையதை |
| வள்ளுயிர்த் தண்ணுமை போல |
| உள்யாது மில்லதோர் போர்வையஞ் சொல்லே |
| (நற்-310) |
எனவரும். இது விறலியிடம் கூறியது. ஏனையோர் மாட்டுக் கூறியது. வந்துழிக் கண்டுகொள்க. |
18) நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் என்பது = புறத்தொழுக்கங் காரணமாகத் தலைவியை நீங்கிய தலைவனை நிகழாநின்ற மனையறத்தே ஊன்று தலைச்செய்ய வேண்டித் தலைவியைக் களவுக்கால முதலாகப் பாதுகாத்து வந்த தன்மையானே கண்ணோடுதலின்றித் தலைவனை இடித்துரைத்துப் பரத்தைமையினின்று மீட்குமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | மனையுறை கோழிக் குறுங்காற் பேடை |
| வேலி வெருகினம் மாலை யுற்றென |
| புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய |
| பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்கு |
| இன்னாது இசைக்கும் அம்பலொடு |
| வாரல் வாழியர் ஐயஎம் தெருவே |
| (குறு-169) |
என்றாங்கு வரும். பைதற் பிள்ளைக் கிளையினைப் பேடை காத்தமை போலத் தான் தலைவியைக் காத்து நிற்கின்றமையும் வாரல் வாழிய என்றதனான் கண்ணோட்டமின்றி இடித்துரைத்தமையும் வாழிய ஐய என்றமையான் மீட்கும் குறிப்புள்ளமையும் கண்டு கொள்க. |
19) பிரியுங் காலத்து எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் என்பது = ஓதல் முதலாய பொருள்பற்றித் தலைவன் பிரிந்து செல்லுங்கால் அவன் முன்னர் நின்று கூறிய மரபொடு கூடிய மறுத்தலின்கண்ணும் என்றவாறு. |
எ - டு : | "உண்கடன் வழிமொழிந்து" |
| என்னும் பாலைக் கலியுள் |
| (22) |
| ‘அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாடச் |
| சுடர்காய் சுரம்போகும் நும்மையாம் எங்கண் |
| படர்கூ றநின்றதும் உண்டோ தொடர்கூரத் |
| துவ்வாமை வந்தக் கடை" |
எனத் தன் குற்றேவல் முறைமை தப்பாது மறுத்தமை கண்டு கொள்க. |
உளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாம் தோழிக் குரிய என்மனார் புலவர் என்பது = மேற்கூறப்பட்ட கிளவிகள் உட்பட அத்தகையனவாயும் பிறவுமாக வகைபட வந்த கிளவிகள் யாவும் கற்பின்கண் தோழி கூறுதற்குரியவென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
கூறப்பெற்ற கூற்றுக்கள் ஒவ்வொன்றும் சிலவாகப் பிரிந்து வரற்குரியவை என்பது விளங்க வகைபட வந்த என்றார். அவற்றுள் சில வருமாறு : |
வேனிற் றிங்கள் வெஞ்சுர மிறந்து |
செலவயர்ந் தனையால் நீயே நன்றும் |
நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன் |
முறுவல் காண்டலின் இனிதோ |
இறுவரை நாடநீ இறந்து செய்பொருளே |
(ஐங்-309) |
இது பொருள்வயிற் பிரிவல் என்ற தலைவனை நோக்கிக் கூறியது. |
மாமழை இடியூஉத் தளிசொரிந் தன்றே |
வாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையே |
யாமே நிற்றுறந் தமையலம் |
ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே |
(ஐங்-423) |
இது தலைமகளாற்றாமையுறுமெனச் செலவழங்குவித்தது. |
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை |
கல்பிறங் கத்தம் சென்றோர் கூறிய |
பருவம் வாரா அளவை நெரிதரக் |
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த |
வம்ப மாரியைக் கார்என மதித்தே |
(குறு-66) |
இது ஆற்றாத தலைமகளைப் பருவம் அன்று என வற்புறுத்தியது. |
ஆமா சிலைக்கும் மணிவரை யாரிடை |
ஏமாண் சிலையார்க் கினமா னிரிந்தோடும் |
தாமாண்பில் வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டு |
வாய்மாண்ட பல்லி படும் |
(கைந்நிலை-18) |
இது நிமித்தங்காட்டித் தலைவியிடத்துக் கூறியது. |
இங்ஙனம் பிறவாறு வருவனவற்றை எல்லாம் இதன்கண் அடக்கிக் கொள்க. |