சூ. 295 : | பெருமையும் சிறுமையும் மெய்ப்பா டெட்டன் |
| வழிமருங் கறியத் தோன்று மென்ப |
(19) |
க - து: | மேல் "பெருமையும் சிறுமையும் சிறப்பிற் றீராக் குறிப்பின் வரூஉம் நெறிப்பா டுடைய" என்றார். அங்ஙனம் பெருமையும் சிறுமையும் பற்றிக் கூறிய வழி எய்தும் பயன் இதுவெனக் கூறுகின்றது. |
பொருள் :தன்மையானும் அளவானும் பெருமையும் சிறுமையும் பற்றிவரும் உவமத்தின்பால் எண்வகை மெய்ப்பாடுகளின் வழிமருங்கு புலப்பாடாகத் தோன்றும் என்று கூறுவர் புலவர். |
என்றது பெருமையும் சிறுமையும் பற்றி வரும் உவமம் பொருளை விளக்குதலோடு எண்வகை மெய்ப்பாடுகளையும் புலப்படச் செய்யும் என்றவாறு. |
"நாலிரண் டாகும் பாலுமா ருண்டே" என்னும் சூத்திரம் எண்வகைச் சுவைகளும் உவமந்தோன்றுதற்கு நிலைக்களமாம் எனக்கூறிற்று. இச்சூத்திரம் பெருமையும் சிறுமையும் பற்றிவரும் உவமங்களான் எண்வகை மெய்ப்பாடுகள் புலனாகும் என்று கூறுகின்றது. பெருமையும் சிறுமையும் பற்றி உவமந்தோன்றுதற்கு நிலைக்களம் சிறப்பு, நலன் முதலிய ஐந்துமேயாகும். |
எ -டு: | ஞாயிறு திங்கள் நாள்கோள் கனையழல் |
| ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை |
எனச் ‘சிறப்பு’ என்பதனை நிலைக்களமாகக் கொண்டு பிறந்த இவ்வுவமத்தான் இசையும் கொடையும் காரணமாக வந்த ‘பெருமிதம்’ என்னும் மெய்ப்பாடு புலப்படாதலைக் காண்க. |
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் |
நிலையின் இழிந்தக் கடை |
(குறள்-964) |
எனக் கிழக்கிடுபொருள் நிலைக்களனாகப் பிறந்த இவ்வுவமத்தான் பிணிபற்றிய இளிவரல் என்னும் மெய்ப்பாடு புலப்பாடாதலைக் கண்டு கொள்க. |
அவாப்போ லகன்றத னல்குல்மேற் சான்றோர் |
உசாப்போல வுண்டே நுசுப்பு |
எனக் காதல் நிலைக்களமாக வந்த இவ்வுவமங்களான் பெருமை பற்றி வந்த மருட்கை என்னும் மெய்ப்பாடும், காமம்பற்றி வந்த உவகை என்னும் மெய்ப்பாடும் புலப்படாதலைக் காணலாம். |
"செருப்பிடைச் சிறுபரல் அன்னன்" |
எனக் கிழக்கிடுபொருள் நிலைக்களமாக வந்த இவ்வுவமத்தான் தறுகண்மை பற்றி வந்த பெருமிதம் என்னும் மெய்ப்பாடு புலனாவதைக் காண்க. |
கடவு ளஞ்சி வானத் திழைத்த |
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட |
எழூஉ நிவந்தன்ன பரேரெறுழ் முழவுத்தோள் |
(பதிற்-31) |
நலனும் வலியும் நிலைக்களமாக வந்த இவ்வுவமத்தான் பெருமை பற்றிய மருட்கை என்னும் மெய்ப்பாடு புலனாதலையறியலாம். |
இங்ஙனம் ஏனை மெய்ப்பாடுகள் எல்லாம் புலப்பாடாக வருதலைச் சான்றோர் செய்யுட்கண் கண்டுகொள்க. |