சூ. 210 : | செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் |
| அறிவும் அருமையும் பெண்பா லான |
(14) |
க - து : | அச்சம், மடம், நாண் முதலிய பெண்மைக் குணமுடைய மகளிர் அகனைந் திணைக்கண் இங்ஙனம் அறிவாராய்ச்சியுடையராய்த் திகழ்தலும், குறிப்பறிந்து ஒழுகலும், வினாவும் செப்பும் நிகழ்தலும் எவ்வாறு? என்னும் ஐயத்தைக் களையுமுகத்தான் பெண்டிர்க்குரிய இயல்பு ஆமாறு கூறுகின்றது. |
பொருள் : நிலையிற்றிரியாத அடக்கமும், மறைபுலப்படா வாறொழுகும் நிறையும் மனக்கோட்டமின்மையும் காலமும் இடமும் அறிந்து கூறத்தகுவன கூறலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து கொள்ளும் அறிவும் தம் உளத்தினைப் பிறர் எளிதின் அறியவொண்ணா தொழுகும் அருமையும் பெண்பாலார்க்குரிய திறன்களாகும். |
குரவரின் வழி நின்றொழுகுங்கால் இவை புலப்படா, வேண்டுழி விளங்கித் தோன்றுமென்பார் "பெண்பால் ஆன" என்றார். இத்திறங்களைத் தோழி, செவிலி முதலானோர்க்கு இந்நூலுள் ஓதப்பெற்றுள்ள கிளவிகளானும் அவற்றிற்குக் காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டுக்களானும் தெரிந்து கொள்க. |