சூ. 292 :

போல மறுப்ப ஒப்பக் காய்த்த

நேர வியப்ப நளிய நந்தவென்று

ஒத்துவரு கிளவி உருவி னுவமம்

(16)
 

க - து: 
 

உருவுவமத்திற்கு ஏற்கும் உவமச்சொற்கள் இவை என்கின்றது.
 

பொருள் :போல  முதலியவாகச்   சொல்லப்படும்  ஒத்துவரு  கிளவி
எட்டும் உருவுவமத்திற்குரிய உவமச்சொற்களாம். செவ்வெண்ணின்  தொகை விகாரத்தாற்றொக்கது.
 

உருவுவமம் ஏனைய மூன்றனையும் போலாது  நிறம்,  குணம்,   சுவை, அளவு   முதலிய   பற்றி வருதலின் அவற்றிற்கெல்லாம் இவை பொதுவாக
ஓதப்பட்டமையான் அவை  யாவற்றிற்கும்  இவை பொருந்திவரும் என்பார்
ஒத்துவரு கிளவி என்றார்.
 

1. தன்சொல்  லுணர்ந்தோர்   மேனி    பொன்போற்   செய்யும் ஊர்
கிழவோனே  (ஐங்-41)  என்பது வண்ணம் பற்றி  வந்தது.  நாலூர்க்கோசர்
வாய்மொழி போல வாயாகின்றே தோழி(குறு-15)   என்பது  குணம் பற்றி வந்தது.    உலைவாங்கு    மிதிதோல்   போலத்    தலைவரம் பறியாது
வருந்துமென்  நெஞ்சே (குறு-172) என்பது அளவு பற்றி வந்தது. நரம்புளர்
முரற்கை  போல இனிதா லம்ம  பண்புமா  ருடைத்தே (ஐங்-402) என்பது 
சுவை  பற்றி   வந்தது.   பிறவும்  சான்றோர்   செய்யுட்கண்  இங்ஙனம்
ஒத்துவருமாறறிந்து கொள்க.
 

      

2.மணிநிறம் மறுத்த மலர்ப்பூங்காயா(இளம்-மேற்)
3.ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ(அகம்-30)
4.வெயிலொளி காய்த்த விளங்குமணி யழுத்தின(பேரா-மேற்)
5.கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்
6.தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி(இளம்-மேற்)
7.நளிய
8.நந்த என்பனவற்றிற்குச் சான்றோரிலக்கியம் வந்தவழிக்கண்டு கொள்க.
 

இவை   எட்டும்   உருவுமத்திற்குச்   சிறந்து  வருவதற்குக் காரணம் :
போல் என்பது ‘பொல்’ என்பதன் (பொலிவு) அடியாகப் பிறந்து விளங்குதல்
என்னும்   பொருள்பட  நிற்றலானும்  மறுத்தல்  என்பது மீளுதல் (மறுபடி)
என்னும்  பொருட்டாகலின்   உவமத்தன்மை    பொருட்கண்  மீளுதலை
உணர்த்தி நிற்பதாகலானும் ஒப்பு  என்பது ஒத்தல். அஃது ‘உவ’ என்பதன்
திரிபாகிய  ஒ  என்னும் முதனிலை  பற்றிப்  பிறந்து மகிழ்தலை உணர்த்தி
நிற்றலானும்   காய்த்த   என்பது    காய்தல்    (வெப்புறுதல்)   என்னும்
பொருளுடையதாய்ப் பரவி நிற்கும் பண்பை உணர்த்தி  நிற்றலானும்  நேர
என்பது  நேர்தல்.  அஃதாவது  நெருங்குதல் என்னும் பொருட்டாகலானும்
வியத்தல் என்பது பரவுதல். [வியலென் கிளவி அகலப் பொருட்டே என்பது
காண்க] என்னும் பொருள் தருதலானும் [மருளுதல் என்னும் பொருள் தரும்
வியத்தல்  வேறு; இச்சொல்  வேறு]  நளி  என்பது  செறிவையும் நந்துதல்
என்பது பெருகுதலையும் பொருளாகக்  கொண்டவையாகலானும் இவ்எட்டும்
உருவுவமத்திற்குச் சிறந்துரிமை பெற்றன.
 

ஆசிரியர்  ஈண்டுப்   பகுத்துக்  கூறிய  உவமச்சொற்களின் உரியடிகள்
பற்றியும்   அவற்றின் பொருள் பற்றியும் கூறிய உரை விளக்கங்கள் அவை
உவமஉருபாக   வருமிடத்தேயாம்.   மற்று,   அவ் உரியடிகள் பெயராயும்
வினையாயும் வருங்கால் வேறு பல்பொருளையும் உடையனவாக வருமென்க.
நிரம்பா   உரிச்சொல்   பற்றிய   ஏனைய  விளக்கங்கள் உரியியலுரையுள்
கூறப்பெற்றமையின் ஆண்டுக்கண்டு கொள்க.
 

இங்ஙனம்  இவ்  உவமச்சொற்களைப்  பாகுபாடு செய்து ஓதியமைக்குப்
பயன்   என்னையெனின்?   சுட்டிக் கூறா உவமத்  தொடரின்கண் உவமத்
தன்மை விரியாமல் உவமச்சொல் மட்டும்   விரிந்து வந்தவழி   அவற்றான்
இஃது   இன்ன உவமம்   என   விளங்கிக்  கொள்ளுதலாம்.  அஃதாவது,
‘செல்லுறழ் தடக்கை’ என்ற விடத்து இடிஅழிக்குமாறு போலஅழிக்கும் என
உவமைத்தன்மை    வினைபற்றி   வந்ததெனவும்  ‘மழைவிழை  தடக்கை’
என்றவிடத்து  மழைபோலப்   பயன்   விளைக்கும்  என  உவமத்தன்மை
பயன்பற்றி    வந்ததெனவும்,    ‘பரங்குன்றிமயக்   குன்றம்    நிகர்க்கும்’
என்றவிடத்துப் இமயம் போல நெடுமையும் பருமையும் பற்றி உவமத்தன்மை
மெய்பற்றி    வந்ததெனவும் ‘பொன்  போன்ற   திருமேனி’ என்றவிடத்து
பொன்னின்  வண்ணமென   உவமத்தன்மை   உருப்பற்றி   வந்ததெனவும்
விளங்கிக் கோடலாம்.
 

இத்தொல்லாசிரியர்   மரபு    கடைச்சங்க  நூல்களுள்ளும் சிதையாமற்
பேணப்படாமையான்  இடைக்காலத்தே  பெரிதும் நெகிழ்ந்து  போயினமை
காணலாம். இதனானும்  தொல்காப்பியத்தின்   தொன்மையும்  செம்மையும்
புலப்பாடாகும்.