சூ. 255 :

மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு

யாப்புற வந்த இளிவரல் நான்கே

(6)
 

க - து :
 

மூப்பு    முதலிய    நான்கு   பொருளும்   பற்றி   இளிவரல்
பிறக்குமென்கின்றது.
 

பொருள் :திட்பமுறவந்த   இளிவரல்   என்னும்   மெய்ப்பாட்டிற்குக்
காரணமாகிய பொருள்  மூப்பும்  பிணியும்  வருத்தமும்  மென்மையுமாகிய
நான்குமாம் எனக் கூறுவர் புலவர்.
 

இவையும் இருபாலும் பற்றி வரும்.
 

1. மூப்பாவது :முதுமை.  அஃதாவது  புலன்கள்  பொறிவழி  நிகழாது
இளைத்தலும் எழிலும் இளமையும் கழிதலுமாம்.
 

எ - டு :

வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்

தீர்தல் செல்லாதென் உயிரெனப் பலபுலந்து

கோல்கா லாகக் குறும்பல ஒதுங்கி

நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று

முன்றிற் போகா முதிர்வினள் யாயும்

(புறம்-159)
 

இது தனக்குற்ற மூப்புப்பற்றி வந்த இளிவரல்.
 

மூத்துத்தலை யிறைஞ்சிய நின்னொடு யானே

போர்த்தொழில் தொடங்க நாணுவல்

(பேரா-மேற்)
 

இது பிறர் மூப்புப்பற்றி வந்த இளிவரல்.
 

2. பிணியாவது நீங்காப் பசியும்  நேராத  காமமும்  உறங்கா நிலையும்
ஊறுசெய் நோயும் இவை போல்வன பிறவுமாம்.
 

எ - டு :

ஊரலர் தூற்றுமிவ் வுய்யா விழுமத்துப்

பீரலர் போலப் பெரிய பசந்தன

நீரலர் நீலம்என அவர்க்கஞ் ஞான்று

பேரஞர் செய்த என்கண்

(கலி-142)
 

இது தன்கண் உற்ற நோய்பற்றி வந்த இளிவரல்.
 

சேயள் அரியோட் படர்தி

நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே

(குறு-124)
 

எனத்தன்  நெஞ்சினை   வேறுநிறுத்தித்  தலைவன்  கூறலின்  இது  பிறர்
கட்டோன்றிய பிணிபற்றி வந்த இளிவரலாம்.
 

3. வருத்தமாவது இடுக்கண்.அஃதாவது எளிதின் முடியாமல் அரிதின்
முயலும் முயற்சியான் வரும் துன்பம்.
 

எ - டு :

மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்

தாமிரந் துண்ணும் அளவை

ஈன்ம ரோஇவ் வுலகத் தானே

(புறம்-74)
 

என்பது தனக்குற்ற வருத்தம் பற்றி வந்த இளிவரலாம்.
 

ஒன்றுஇரப்பான் போல்எளி வந்தும் சொல்லும்-உலகம்

புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்

அன்னான் ஒருவன்றன் ஆண்டகை விட்டென்னைச்

சொல்லஞ் சொற்கேட்டி ...?

(கலி-47)
 

என்பது பிறர்க்குற்ற வருத்தங் காரணமாகப் பிறந்த இளிவரல்.
 

4. மென்மையாவது :   ஆற்றலும்      திறனும்     அமையாமையும்
வலியின்மையுமாம்.  மென்மை   எனினும்   நொய்மை  எனினும்  ஒக்கும்.
நல்குரவெண்பார்   இளம்பூரணர்,   அஃது   அழுகைக்குப்   பொருளாகக்
கூறினமையான் சாலாதென்க.
 

எ - டு :

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்

பெண்மை யுடைக்கும் படை

(குறள்-1258)
 

என்பது தன் மாட்டமைந்த மென்மைபற்றி வந்த இளிவரல்.
 

கடந்தடு தானை மூவிரும் கூடி

உடன்ற னிராயினும் பறம்புகொளற் கரிதே

(புறம்-110)
 

என்பது பிறர் மென்மை பற்றி வந்த இளிவரலாம்.
 

"யாப்புற" என்றதனான் "யானை,  ஒருகை  உடையது  எறிவலோயானும்
இருகை சுமந்து வாழ்வேன்" எனப் பகைக்கு மென்மை  கற்பித்துக்  கூறலும்
இளிவரலாய் அடங்குமென்க.