சூ. 142 :

வெளிப்பட வரைதல் படாமை வரைதல்என்று

ஆயிரண் டென்ப வரைத லாறே

(50)
 
க - து :

களவின்    முடிபாகிய   வரைதல்     பற்றியதொரு முறைமை
கூறுகின்றது.
 

பொருள் : களவொழுக்கம்   புறத்தார்க்கும்   வெளிப்பாடான பின்னர்
வரைந்து கோடலும் வெளிப்படாததற்கு   முன்னர் வரைந்து கோடலும் என
வரைதல் பற்றிய முறைமை இருவகைப்படுமென்று கூறுவர் நூலோர்.
 

கரணமொடுபுணர   வரைந்துகொள்ளும்   வரைவு   யாவரும்   அறிய
வெளிப்பட வரைந்து கோடலும்,  புணர்ந்துடன்  போகிய காலைப் பிறர்க்கு
வெளிப்பாடாகாமல் வரைந்து   கோடலும்  என இருவகைப்படும் என்பதும்
இதற்கு உரையாகக் கொள்க.
 

எ - டு :

"தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக

வேய்புரை மென்றோள் பசலையும் அம்பலும்

மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன்நீங்க

சேய்உயர் வெற்பனும் வந்தனன்

பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே"

(கலி-39)
 

இது களவு வெளிப்பட்ட பின் வரைவு நிகழ்ந்தமை கூறிற்று.
 

கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து

வானின் அருவி ததும்பக் கவினிய

நாடன் நயனுடையன் என்பதனான் நீப்பினும்

வாடல் மறந்தன தோள்

(ஐந்-எழு-2)
 

இது வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது.
 

"எம்மனை முந்துறத் தருமோ

தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே"
 

இது   கொண்டுதலைக்   கழிந்தவிடத்துக் கொடுப்போரின்றியும் கரணம்
நிகழ்ந்தமையின் அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம்.