சூ. 190 :வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது
(47)
 

க - து :

பாலை  ஒழுக்கமாகிய பிரிவுகட்குரிய  கால   வரையறை கூறத்
தொடங்கி  இச்சூத்திரத்தான் ஓதற்  பிரிவுக்குரிய கால  எல்லை
கூறுகின்றார்.
 

பொருள் :  பொதுக்  கல்வியல்லாத  சிறப்புக் கல்வியின்  பொருட்டுப்
பிரியும் ஓதற்பிரிவு  மூன்றாண்டுக்கால  எல்லையைக் கடவாது.  இளமையிற்
கற்கும்  பொதுக் கல்வியல்லாத சிறப்புக் கல்வி என்பது தோன்ற "வேண்டிய
கல்வி"  என்றார். மூன்று  இறவாது. எனவே  அதற்கு உட்பட்ட இரண்டும்
ஒன்றுமாகிய  ஆண்டுகள்  நிகழினும் இழுக்காதெனக்  கொள்க.  அந்தணர்
முதலாய  நாற்பாலாரும்  வேண்டும் கல்வி  கேள்வி பற்றி அகத்திணையுள்
கூறப்பட்டது.
 

இதற்கு நச்சினார்க்கினியர்  கூறும்  உரை  சமயத்துறை ஒன்றுமே பற்றி
நிற்றலின் குன்றக் கூறலாகுமென்க.