சூ. 203 :

வண்ணம் பசந்து புலம்புறு காலை

உணர்ந்தது போல உறுப்பினைக் கிளவி

புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே

(7)
 

க - து :

இது   "நோயும்   இன்பமும்"   என்னும்    சூத்திரத்தான்
எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்:தலைவி   தன்மேனி  வனப்புத்திரிந்து  தனிப்படர்  உறும்
காலத்துத்   தனது    நிலையைத்   தனது    உறுப்பு     ஒவ்வொன்றும்
உணர்ந்துள்ளமைபோல அதற்குப் பொருந்திய வகையாற் புனைந்து கூறவும்
பெறும்.
 

எ - டு :

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்

[குறள்-1233]
 

நாணில மன்றஎம் கண்ணே நாண்நேர்பு

சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்பு அன்ன

கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ

நுண்ணுறை அழிதுளி தலைஇய

தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே

(குறு-35)
 

"புணர்ந்த வகையான்" என்றதனான்  அவை செயற்படுவன போலக் கூறலும்
கொள்க.
 

கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்

தின்னும் அவர்க்காண லுற்று

(குறள்-1244)
 
எனவரும்.
 

உம்மையான் உறுப்பொடு தொடர்புடையவற்றைக் கூறலும் கொள்க.
 

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை

(குறள்-1277)
 
எனவரும்.