106. தோலுழிஞை
வென்றி யோடு புகழ்விளைக் கும்மெனத்
தொன்று வந்த தோன்மிகுத் தன்று.

(இ - ள்.) வெற்றியுடன் இசையை உண்டாக்குமெனச் சொல்லிப் பழையதாகி வந்த கிடுகுபடையைச் சிறப்பித்தது எ-று.

(வ - று.)
1நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி
இன்றுநாம் வைக லிழிவாகும்- வென்றொளிரும்
பாண்டி னிரைதோல் பணியார் பகையரணம்
வேண்டி னெளிதென்றான் வேந்து.

(இ - ள்.) நிலைநின்ற கீர்த்திபோக நிலைநில்லாத உயிரைக்காத்து இற்றை நாளிலே நாம் இவ்வெயிற்புறத்துத் தங்குமது நமக்குத் தாழ்வு; வென்று விளங்கும் கண்ணாடி நிரைத்த கிடுகுபடை வணங்காதார் முனைக் குறும்பினைக் கொள்ளவேண்டிற் கொள்கை எளிதென்று சொன்னாள் மன்னன் எ-று.

ஆதலால் இன்று நாம் வைகல் இழிவாகுமென்க. தோலென்பது ஆகுபெயர்.

(12)

1. தொல். புறத். சூ.10, இளமு. மேற் "நின்ற ...வேந்து" : தொல். புறத். சூ12 ந. மேற்; நின்ற...உயிர்" : குறள்.235; சூளா. சீய. 204.