207. களவழி வாழ்த்து
செங்களத்துச் செழுஞ்செல்வம்
வெண்டுறையாழ்ப் பாணர்விளம்பின்று.

(இ - ள்.) சிவந்த போர்க்களரியிடத்து வளவியசெல்வத்தை 1ஆடற் பாட்டினை வல்ல யாழ்ப்பாணர் சொல்லியது எ-று.

(வ - று.)
ஈண்டி யெருவை யிறகுளரும் வெங்களத்து
வேண்டியாங் கொண்ட விறல்வேழம் - வேண்டாள்
வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே
விளைகட் பகர்வாள் விலை.

(இ - ள்.) திரண்டு பருந்து சிறகடிக்கொள்ளும் வெவ்விய பூசற்களரியிலே விரும்பி யாங்கள் கைக்கொண்ட வெற்றிவாரணத்தை விரும்பாள், 2சங்குகளும் கொம்பும் முழங்கும் வாளையுடைய சேனையினையுடைய மன்னனே, முதிர்ந்த நறவை விற்பாள் அதன்விலைக்கு எ-று.

(19)

1. யாழ்ப்பாட்டு
2. பு - வெ. 24.