223. வாண்மங்கலம்
கயக்கருங் கடற்றானை
வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று.

(இ - ள்.) பகைவராற் கலக்குதற்கரிய கடல்போலும் சேனையினையும் வலிய யானையினையுமுடையான் வாளைப் புகழ்ந்தது எ-று.

(வ - று.)
கொங்கவி ழைம்பான் மடவார் வியன்கோயில்
மங்கலங் கூற மறங்கனலும்- செங்கோல்
நிலந்தரிய செல்லு நிரைதண்டார்ச் சேரன்
வலந்தரிய வேந்திய வாள்.

(இ - ள்.) தேன்மலரும் சுருள் குரல் அஏகம் துஞ்சுகுழல் கொண்டை என்னும் ஐந்து பகுதியானமைந்த கூந்தலையுடைய பேதையர் அகன்ற மாளிகையிடத்து நன்மையைச் சொல்லும் சினமழலும்; நீதி நிலத்தைத் தருவான் வேண்டி நடக்கும் நிரைத்த குளிர்ந்த மாலையினையுடைய வானவன் வெற்றிவேண்டி உயர்த்த வாள்.

வியன்கோயிலிற் கொங்கவிழைம்பால் மடவார் நிலந்திரியச் செல்லும் செங்கோலினது மங்கலத்தைக் கூற நிரைதண்டார்ச் சேரன் வலந்தரிய ஏந்திய வாள் மறங்கனலுமெனக் கூட்டுக எ-று.

செல்லும் : செலுத்துமென்றுரைப்பாருமுளர்.

(35)