வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப வழிவழி சிறக்கென வாய்மொழிந் தன்று. (இ - ள்.) நீ வணங்குந் தெய்வம் நின்னைப் பரிகரிப்ப நின் வழிவழி மிகுவதாகவெனச் சொல்லி உண்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) கொடிபடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக் கடிபடு கொன்றையான் காப்ப - நெடிதுலகிற் பூமலி நாவற் பொழிலகத்துப் போய்நின்ற மாமலைபோன் மன்னுக நீ. (இ - ள்.) ஒழுங்குவிடும் மூன்று இலைத்தொழிலாற் பொலிந்த சூலத்தினையும் கூற்றம்போன்ற குந்தாலியினையும் நறுநாற்றமிகும் இதழியினையுமுடைய இறைவன் காப்ப நெடுங்காலம் நிலவலயத்துப் பொலிவு மிக்க நாவலந்தீவிடத்து அண்டமுருவிப் போய்நின்ற மாமேருவென்னும் பெரிய மலைபோல நின்று நிலைப்பாயாக எ-று. நாவலந் தீவிடத்து மன்னுவாயாகவெனக் கூட்டுக. பூமியில் ஒருகூறு நாவலந்தீவு. (38) |