230. புலவராற்றுப்படை
இருங்கண்வானத் திமையோருழைப்
பெரும்புலவனை யாற்றுப்படுத்தன்று.

(இ - ள்.) பெரிய இடத்தினையுடைய வானத்துத் தேவர்களிடை மிக்க அறிவாளனை நெறியிலே செலுத்தியது எ-று.

(வ - று.)
1வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும்-பொறிகட்
கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க
அருளீயு மாழி யவன்.

(இ - ள்.) நறுநாற்றத்தினை யுடைத்தாய் ஒலிக்கும் அருவியாற் பொலிந்த திருவேங்கடத்திடத்துப்போவையாயின், முறைமைகொண்ட வேடத்தையுடையோய்,நீயும், இந்திரியங்கட்கு மயக்கங்கொடுக்கும் காசினியில் துயரெல்லாமொழிய அருளை வழங்கும், சக்கரத்தினையுடையவன் எ-று.

நீயும்செல்லின் அருளீயுமெனவே, எனக்கு நல்கினானென்பதாம்;2"உலவா வூக்கமொ டுன்னியது முடிக்கும், புலவராற்றுப்படை புத்தேட்கு முரித்தே" என்பதனானறிக.

(42)

1. தொல். புறத் . சூ.21, இளம் .மேற்.
2. பன்னிருபாட்டியல், 320.