241. வேம்பு
விரும்பா ரமரிடை வெல்போர் வழுதி
சுரும்பார் முடிமிசைப் பூப்புகழ்ந் தன்று.

(இ - ள்.) பகைவர் பூசலிடத்து வெல்லும் போரையுடைய பாண்டியன் வண்டுநிறைந்த மகுடத்தின்மீதே புனையும் மலரினைப் புகழ்ந்தது எ-று.

(வ - று.)
1தொடியணிதோ ளாடவர் தும்பை புனையக்
கொடியணிதேர் கூட்டணங்கும் போழ்தின் - முடியணியும்
காத்தல்சால் செங்கோற் கடுமா னெடுவழுதி
ஏத்தல்சால் வேம்பி னிணர்.

(இ - ள்.) கடகம் பொலிவுறு புயத்தினையுடைய வீரர் போர்ப்பூவைச் சூடப் பதாகையாற் சிறந்த தேர் பகைத்திரளை வருத்துங் காலமாகிய போரில் மகுடத்திலே சூடும், காத்தலமைந்த செங்கோலினையும் கடிய குதிரையினையுமுடைய அளவிடுதற்கரிய பாண்டியன் புகழ்தலமைந்த வேம்பின் பூக்கொத்தினை எ-று.

இணர் முடியணியு மென்க.

(2)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்