283. இதுவுமது
மேவருங் கணவன் றணப்பத் தன்வயின்
காவல் கூறினு மத்துறை யாகும்.

(இ - ள்.) பொருந்துதல்வந்த கொழுநன் நீங்கத் தன்னிடத்துக் காவலைச் சொல்லினும் முற்பட்ட துறையேயாம் எ-று.

(வ - று.)
மௌவல் விரியு மணங்கமழ் மான்மாலைத்
1தௌவன் முதுகுரம்பைத் தான்றமியள்-செவ்வன்
இறைகாக்கு மிவ்வுலகி னிற்பிறந்த நல்லாள்
நிறைகாப்ப வைகு நிறை.

(இ - ள்.) மௌவல் மலரும் மணநாறும் மயக்கத்தினையுடைய மாலைக் காலத்து அழிந்த பழங்கூரையிடத்துத் தான் தனியொருத்தி ,செவ்விதாக இறைவன் காவல் போற்றும் இந்நிலத்திடத்துக் குடிப்பிறந்த நல்லவளுடைய காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கமாகிய நிறை,பரிகரிப்பத் தங்கும் நிறையானது எ-று.

(9)

1. தையன்