329. கண்டு கைசோர்தல்
போதார் கூந்தற் பொலந்தொடி யரிவை
காதல் கைம்மிகக் கண்டுகை சோர்ந்தன்று.

(இ - ள்.) மலர் நிறைந்த குழலினையும் பொற்றொடியினையும் உடைய தலைவிதன் அன்பு கைகடப்பத் தோழி கண்டு தன்னுடைய ஒழுக்கம் தளர்ந்தது எ-று.

(வ - று.)
1ஆம்ப னுடங்கு மணிவளையு மேகின
கூம்பன் மறந்த கொழுங்கயற்கண் - காம்பின்
எழில்வாய்ந்த தோளி யெவனாங்கொல் கானற்
பொழிலெல்லா மீயும் புலம்பு.

(இ - ள்.) ஆம்பற்றண்டை வளைத்திட்ட அழகிய வளையும் வீழ்ந்தன;துயில் இழந்தன,வளவிய கயல்போலும் விழிகள்;மூங்கிலினும் அழகு மருவின தோளினையுடையாள் என்னாங்கொல்லோ!கடற்கரைச் சோலை முழுதுந்தரும்,தனிமையை எ-று.

ஆம்பற்றண்டுபோலும் திரண்ட வளையென்பாரும்,இதழ்போலும் வெள்வளையென்பாருமுளர்.

(5)

1. ஆம்பல்வளை: புறநா.63:12,பரி.11:101-2.