340. பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்
மற்றவர் சேரியின் மைந்த னுறைந்தமை
இற்றென விறலி யெடுத்துரைத் தன்று.

(இ - ள்.) பரத்தையர் சேரியிடத்துத் தலைவன் தங்கினபடி இத்தன்மைத்தெனப் பாணிச்சி எடுத்துச் சொல்லியது எ-று.

(வ - று.)
தண்டா ரணியவாந் தையலார் சேரியுள்
வண்டார் வயலூரன் வைகினமை - உண்டால்
அறியே னடியுறை யாயிழையாற் பெற்றேன்
சிறியேன் பெரிய சிறப்பு .

(இ - ள்.) குளிர்ந்த மாலையினையுடைய அழகை ஆசைப்படும் பரத்தையர் சேரியிடத்திலே சுரும்பு நிறைந்த கழனியையுடைய ஊரன் தங்கினமை நீ அருளினபடியால் உண்டு; யான் அறியேன்; அடி பொருந்தும் ஆபரணத்தினையுடையாளாலே பெற்றேன் , சிறிய யான் பெரிய நன்மையை எ-று.

(16)