58. 1பெருஞ்சோற்று நிலை
திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப்
பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று .

(இ - ள்.) பகைவர் வேற்றுப்புலத்தை நமக்கு அழித்துத்தருவரிவரென்று சொல்லி மிக்க சோற்றை வீரர் கொள்ளும் வகையிலே கொடுத்தது எ-று.

(வ - று.)
இயவர் புகழ வெறிமுர சார்ப்பக்
குயவரி வேங்கை யனைய - வயவர்
பெறுமுறையாற் பிண்டங்கோ ளேவினான் பேணார்
இறுமுறையா லெண்ணி யிறை

(இ - ள்.) அரசன் வாச்சியக்காரர் துதிப்பக் கொட்டும் வீரமுரசு முழங்க அரிவாளேபோன்ற வரியினையுடைய புலியையொத்த வீரர் பெறும்படியே சோற்றுத்திரளையைக் கொள்கையை ஏவினான்; பகைவர் படும்வகையால் விசாரித்து அரசன் எ-று.

(23)

1. தொல். புறத். சூ. 8; அகநா. 233 : 9; புறநா. 2 : 16; சிலப். 23 : 55, 25 : 144, 26 : 49, 29 : ஊசல்வரி.