78. தொட்ட காஞ்சி
வியன்மனைவிடலை புண்காப்பத்
துயன்முலைப்பேழ்வாய்ப் பேய்தொட்டன்று .

(இ - ள்.) அகன்ற இல்லிலே தலைமகனுடைய புண்ணைப் பரிகரிக்க நான்றமுலையினையும் பெரியவாயினையுமுடைய பேய்மகள் புண்ணைத் தீண்டியது எ-று.

(வ - று.)
கொன்றுருத்த கூர்வே லவற்குறுகிக் கூரிருள்வாய்
நின்றுருத்து நோக்கி நெருப்புமிழாச் - சென்றொருத்தி
ஒட்டார் படையிடந்த வாறாப்பு ணேந்தகலம்
தொட்டாள் பெருகத் துயில் .

(இ - ள்.) கூரியவேலினை உடையவனைக் கிட்டி மிக்க இருளின்கண்ணே நின்று கோபித்துப் பார்த்து அழலைக் கான்று அணுகப்போய் ஒரு பேய்மகள் பகைவர் ஆயுதம் பிளந்த தீராத புண்ணைத் தாங்கின மார்பினைத் தீண்டினாள், உறக்கம் மிக எ-று.

உறக்கமிகுதல் - உயிர்போதல் .

(18)