"யாழோர் கூட்டம் இல்லது எனப்படாது உலகியலாம்" என்று
பேராசிரியரும், "புணர்ச்சியைக் களவு என்றும், பிரிவைக் கற்பு என்றும்
பெரும்பான்மைபற்றி வகுத்து, அவற்றைச்சுவை மிகுதி பயப்ப உலக
நடையோடு ஒப்பும் ஒவ்வாமையும் உடையவாக்கிக் கூறுகின்றார்"
(காமத்துப்பால் - பாயிரவுரை) என்று பரிமேலழகரும், "இஃது இல்லது
எனப்படாது உலகியலேயாம்" (தொல். பொ. 3) என்று நச்சினார்க்கினியரும்
அகப்பொருள் உலகியலை உடன்கொண்டது என்ற கருத்தினர். "நாடக
வழக்காவது சுவைபடவருவன எல்லாம் ஓரிடத்துத் தொகுத்துக் கூறுதல்;
உலகியல் வழக்காவது உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது.
புறப்பொருள் உலகியல்பான் அன்றி வாராமையின் அது நாடகவழக்கம்
அன்று ஆயிற்று" (தொ. பொ. 56) என்ற உரையாசிரியரும் இக்கருத்தினரே.
"அகப்பொருள் இல்லோன் தலைவனாக இல்லது புணர்ப்பது
" (தொ. சொ. 155) எனச் சேனாவரையரும், "இல்லது" இனியது நல்லது என
நாட்டப்பட்டது" எனப் பல இடங்களிலும் இறையனார்களவியல்
உரையாசிரியரும் கூறியுள்ளனர். "மனைகெழுவயலை" என்ற பாடலில்,
ஊர் என்ற முதற்பொருளும், ஊரன்-வயலை-வேழம்- என்ற
கருப்பொருள்களும், ஊடலாகிய உரிப்பொருளும் கூறப்பட்டமை நாடக
வழக்காம். தலைவனுடைய புறத்தொழுக்கம் பற்றித் தலைவி கொடுமை
கூறுதல் உலகவழக்காம். எனவே, இப்பாடலில் நாடகவழக்கம் உலகியல்
வழக்கம் என்ற இரண்டும் வந்தன.
"முளிதயிர்"- தயிரைப் பிசைந்து மோராக்கித் தாளிப்பின் புகை தன்
கண்களை வாட்டத தான் முயன்று சமைத்த மோர்க்குழம்பைக் கணவன்
சுவைத்து உண்டமையால் தலைவி முகம் மலர்ந்த செய்தி உலகியலில்
காணப்படுவதே. இதன்கண் நாடக வழக்கிற்குரிய முதல் கரு
உரிப்பொருள்கள் இடம்பெறவில்லை.